FACT CHECK: ஜெர்மனியில் மேகக் கூட்டத்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்டதா?

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

ஜெர்மனியில் மேகக் கூட்டத்திலிருந்து பாங்கு சப்தம் கேட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

வீடியோ பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் இஸ்லாமியர்களின் பாங்கு சப்தம் கேட்கிறது. பலரும் தங்கள் மொபைல் போனில் அதை வீடியோ எடுப்பது போன்று உள்ளது. இந்த வீடியோவுடன் புகைப்பட பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜெர்மனியில் திடீரென மேகக்கூட்டம் திரண்டு அதிலிருந்து பாங்கு சப்தம் ஒலித்து இருக்கிறது அதை மக்கள் பிடித்த காட்சிதான் இது. இந்த செய்தியை அல் ஜஸீரா தொலைகாட்சி வெளியிட்டுள்ளார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Ta என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 26ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜெர்மனியில் மேகங்கள் திரண்டு, அதில் இருந்து பாங்கு சப்தம் கேட்டது என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தது. வீடியோவில் இஸ்லாமியர்கள், பொது மக்கள், போலீஸ் என பலரும் உள்ளனர். யாரும் வானத்தை வீடியோ எடுத்தது போல இல்லை. கட்டிடம் ஒன்றை வீடியோ எடுத்தது போல உள்ளது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டில் இருந்து இந்த தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதும், ஏ.எஃப்.பி உள்ளிட்ட ஊடகங்கள் இந்த வீடியோ தொடர்பாக ஏற்கனவே ஃபேக்ட் செக் செய்திருப்பது தெரிந்தது. 

அவற்றுக்கு இடையே சில வீடியோ பதிவுகளும் கிடைத்தன. அவற்றைப் பார்த்த போது, 2020ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி இந்த வீடியோ பதிவிட்டிருந்தனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக இஸ்லாமியர்கள் வந்தனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக அதற்குத் தடைவிதிக்கப்பட்டது. எனவே, முதன் முறையாக ஒலி பெருக்கி வழியாக தொழுகைக்கு அழைப்புவிடப்பட்டது. அந்த நேரத்தில் அருகில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் மணியும் ஒலித்தது. இதைப் பலரும் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர். 

அசல் பதிவைக் காண: yenisafak.com I Archive

தொடர்ந்து தேடிய போது பெர்லினில் Flughafenstraße என்ற இடத்தில் உள்ள Dar Assalam Moschee என்ற மசூதியில் இந்த நிகழ்வு நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். இதை கீ வார்த்தையாகக் கொண்டு கூகுளில் தேடினோம். அப்போது 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தொழுகையை போலீசார் தடுத்து நிறுத்தியதாக செய்திகள், வீடியோக்கள் கிடைத்தன. அந்த வீடியோக்களில் மசூதியில் இருந்து இஸ்லாமிய மத குரு போன்ற நபர் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதை காண முடிந்தது.

ஜெர்மனியின் பெர்லினில் உள்ள அந்த குறிப்பிட்ட மசூதியின் இருப்பிடத்தைக் கூகுள் மேப்-ல் தேடிப் பார்த்தோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சியும் மசூதியின் இருப்பிடமும் ஒத்துப்போவதைக் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: Google Map

இதன் மூலம் ஜெர்மனியில் உள்ள மசூதியிலிருந்து வந்த தொழுகைக்கான அழைப்பு பாங்கை மேகத்திலிருந்து கேட்டது என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜெர்மனியில் மேகங்கள் திரண்டு அதில் இருந்து இஸ்லாமியர்களுக்கான தொழுகை அழைப்பு பாங்கு ஒலித்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:FACT CHECK: ஜெர்மனியில் மேகக் கூட்டத்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel