
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வந்த கூட்டத்தின் காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரம்மாண்ட கூட்டத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. Ram Kumar என்பவர் 2021 மார்ச் 7 அன்று வெளியிட்ட பதிவில், “டேய் சங்கிகளா பாவம் டா மம்தா விட்ருங்கடா” என்று குறிப்பிட்டுள்ளார். கமெண்ட் பகுதியில் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் கூடிய மக்களின் புகைப்படம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
Kalaiselvi Samyraj என்பவர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின் புகைப்படத்துடன் இந்த படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இப்போதுதான் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது என்று கூறியுள்ளார். இவர்களைப் போல பலரும் இதை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு இதே படத்தைக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர். அதில், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடந்த கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க வந்த கூட்டத்தினர் என்று குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
அப்போது இது 2019ம் ஆண்டு நடந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. பலரும் இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை என்பதால் அதைப் பற்றி கட்டுரை வெளியிடவில்லை.
இந்த நிலையில், பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டம் என்று பரவி வரும் நிலையில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இந்த படத்தை சில இணைய ஊடகங்கள் பதிவிட்டிருந்தது தெரிந்தது. மேற்கு வங்க மம்தா அரசு மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசுக்கு எதிராக கூடிய இடதுசாரிகள் கூட்டம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: peoplesdispatch.org I Archive 1 I alamy.com I Archive 2
இது தவிர இந்த புகைப்படத்தை alamy.com உள்ளிட்ட தளங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிந்தது. அவற்றில் இந்த புகைப்படம் 2019ல் மேற்கு வங்கத்தில் நடந்த இடதுசாரிகள் பொதுக் கூட்டம் என்றே குறிப்பிட்டுள்ளனர். எனவே, இது மோடி பங்கேற்ற படம் இடல்லை என்பது உறுதியாகிறது.
பிரதமர் மோடி மார்ச் 7, 2021ல் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டது உண்மைதான். அந்த புகைப்படங்களைப் பகிராமல், பழைய படத்தைப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
மற்ற படங்களில் பாரதிய ஜனதா கட்சிக் கொடி தெரிகிறது. பிரதமர் அமர்ந்திருக்கும் புகைப்படம் கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது என்று இது தொடர்பாக வெளியான செய்திகள், புகைப்படங்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், மக்கள் மிகப்பெரிய அளவில் கூடியிருக்கும் புகைப்படம் 2021ல் எடுக்கப்பட்டது இல்லை, இது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டமோ, காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கூட்டணியின் புகைப்படமோ இல்லை, முழுக்க முழுக்க 2019ல் நடந்த இடதுசாரிகள் கூட்டத்தின் புகைப்படம் என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தின் காட்சி என்று பகிரப்படும் படம் 2019ல் நடந்த இடதுசாரிகள் பொதுக் கூட்டத்தின் படம் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மேற்கு வங்கத்தில் மோடிக்கு கூடிய கூட்டமா இது?- பழைய படத்தை பகிர்வதால் சர்ச்சை
Fact Check By: Chendur PandianResult: Partly False
