FACT CHECK: சாவர்க்கர் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி 50 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் வீர சாவர்க்கர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சாவர்க்கர் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 26 பிப்ரவரி 1966 “இந்தியாவிலேயே.. சுதந்திரத்திற்காகப் போராடி 50 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் வீர சாவர்க்கர் நினைவு தினம் இன்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை R M Siva Kumar என்பவர் 2021 பிப்ரவரி 26 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

50 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவர் சாவர்க்கர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 50 ஆண்டுகள் தண்டனையை அவர் அனுபவித்தார் என்று குறிப்பிட்டுள்ளது உண்மையா என்றே ஆய்வு செய்தோம்.

அந்தமான் சிறையில் இருந்த போது பிரிட்டிஷ் அரசுக்குத் தொடர்ந்து மன்னிப்புக் கடிதம் எழுதி விடுதலையானவர் என்று சாவர்க்கர் பற்றி சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும்போது 50 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்தார் என்று சொல்வது எந்த விதத்தில் சரியானது என்று தெரியவில்லை. சாவர்க்கரின் சிறை வாழ்க்கை பற்றி மட்டும் ஆய்வு செய்தோம். 

அசல் பதிவைக் காண: deccanherald.com I Archive

சாவர்க்கரின் சிறை வாழ்க்கை பற்றி தேடியபோது பல ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் கிடைத்தன. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என எதுவும் கிடைக்கவில்லை. அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களின் நகல் கிடைத்தது.

அதில், 1910ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது 25 ஆண்டுகள் சிறை தண்டனை. மற்றொரு வழக்கில் மேலும் ஒரு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 50 ஆண்டுகள் அவர் சிறையில் கழிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. சில பதிவுகளில் அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் அரசியல் கைதியாக கருதப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: cultural.maharashtra.gov.in I Archive

சாவர்க்கர் என்று ஒரு இணையதள பக்கம் உள்ளது. அதை யார் நடத்துகிறார்கள் என்று இல்லை. அந்த தளத்தில் சாவர்க்கர் 1910 டிசம்பர் 24ம் தேதி ஆயுள் சிறை வழங்கப்பட்டது என்றும், 1911 ஜூன் 31ம் தேதி இரண்டாவது முறையாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது என்றும், பிரிட்டிஷ் ஆட்சியில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒரே நபர் என்றும் குறிப்பிட்டிருந்தனர். 1921ம் ஆண்டு மே 21ம் தேதி சாவர்க்கர் அந்தமானிலிருந்து ரத்னகிரி சிறைக்கு மாற்றப்பட்டார் என்றும், 1921 முதல் 23 வரை ரத்னகிரி சிறையில் இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: savarkar.org I Archive

1924 ஜனவரி 6ம் தேதி ரத்னகிரியில் தங்கியிருக்க வேண்டும், அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார் என்றும் 1937ம் ஆண்டு விடுதலைக்கான நிபந்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு காந்தியடிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லாததால் அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது ஓராண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஓராண்டு என்பது சுதந்திரத்துக்குப் பிறகு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சாவர்க்கர் 1910 முதல் 1924 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் அதாவது, தோராயமாக 13 ஆண்டுகள் சிறையிலிருந்துள்ளார் என்பது உறுதியாகிறது. 

சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனை (தலா 25 ஆண்டுகள்) என 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அவர் இங்கிலாந்து அரசுக்கு எழுதிய மன்னிப்பு கடிதம் அடிப்படையில் 14 ஆண்டுகளில் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டார் என்பது உறுதியாகிறது. இதன் மூலம் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் என்பது தவறு, 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார் என்பதே சரியானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

சாவர்க்கருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், அவர் 12 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டதும் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சாவர்க்கர் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False