
‘’ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்க அதானி குழுமத்திற்கு ரூ.60,000 கோடி கடன் வழங்கிய எஸ்பிஐ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார்.
இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் சமூக வலைதளங்களில் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
அதானி குழுமம் கடந்த 2010ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கார்மைக்கேல் என்ற நிலக்கரி சுரங்கத்தில், உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளும் பணி ஒப்பந்தத்தை பெற்றது. இதற்காக, பிரத்யேக ரயில் பாதை அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு 6 கோடி டன் நிலக்கரி உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு எவ்வளவு என இதுவரை அதானி குழுமம் வெளிப்படையாகக் கூறவில்லை.
தற்சமயம், உற்பத்திப் பணிகள் தொடங்கியுள்ள சூழலில், அந்த நிலக்கரி உற்பத்தியால் ஆஸ்திரேலியாவின் நீர், நில வளம் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் அதானி குழுமத்தின் ஆஸ்திரேலிய சுரங்கப் பணிகளுக்காக, எஸ்பிஐ 60000 கோடி கடன் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் சிலர் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலக்கரி உற்பத்தித் திட்டத்திற்கு மொத்தம் ரூ.60,000 கோடி செலவாகும் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால், உண்மையில், இந்த திட்டப் பணிகளுக்கு, எஸ்பிஐ தரப்பில், 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு (ரூ.5000 முதல் 6000 கோடி) கடன் தருவதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிதி உதவி இன்னமும் முழுதாக, அதானி குழுமத்திற்கு வழங்கப்படவும் இல்லை.
இப்படி இருக்கும்போது, அதானி குழுமத்திற்கு, ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்க எஸ்பிஐ ரூ.60,000 கோடி கடன் வழங்கியதாகக் கூறி சமூக வலைதளங்களில் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
Fortune India Link I downtoearth link I Business Standard Link
இதுதொடர்பாக, Stop Adani என்ற இணையதளமே தொடங்கப்பட்டு, அதில், அதானிக்கு எதிரான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த இணையதளத்திலேயே, 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.5000 முதல் ரூ.6000 கோடி) கடன் தருவதை எஸ்பிஐ தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதவிர, அதானி தரப்பில் தகவல் தேடியபோது, இந்திய வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடன் மற்றும் வாராக்கடன் பற்றி ஏற்கனவே சில விளக்கம் அளித்திருப்பதாக, தெரியவந்தது. அதனை கீழே இணைத்துள்ளோம்.
அதானி குழுமத்தின் இணையதளத்திலும் நிதிநிலை அறிக்கைகளை பார்வையிட்டோம். எங்கேயும் எஸ்பிஐ தரப்பில் இருந்து ரூ.60,000 கோடி கடன் வாங்கியதாகக் குறிப்பிடப்படவில்லை.
இதேபோல, மும்பை விமான நிலையத்தை அதானி வாங்குவதற்காக, எஸ்பிஐ கடன் உதவி செய்தது என்று கூறி ஒரு வதந்தி சமீபத்தில் பரவியது. அதுபற்றியும் ஆய்வு செய்து, அது உண்மையல்ல என நிரூபித்திருக்கிறோம். அந்த கட்டுரை லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் தொடங்க எஸ்பிஐ அதானி குழுமத்திற்கு ரூ.60,000 கோடி கடன் வழங்கியதா?
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
