ஆளுநர் ரவியை பார்த்து வியந்தேன் என்று உசைன் போல்ட் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாடு ஆளுநர் ரவியைப் பார்த்து வியந்தேன் என்று உலக முன்னணி ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் கூறியதாக ஒரு நையாண்டி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ரவியை பார்த்து வியந்த உசைன் போல்ட். சட்டசபையிலிருந்து ஆளுநர் ரவி ஓடிய காட்சியை பார்த்து வியந்ததாக பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்! ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றிருந்தால், தனது சாதனைகளை ரவி முறியடித்திருப்பார் எனவும் கூறினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Baskaran Basskaran Bass என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 10ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார் என்று தெரிந்ததும், சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ரவி வெளியேறினார். அவர் வெளியேறியதைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஆளுநர் ஓடியதைக் கண்டு வியந்தேன் என்று பிரபல ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் கூறினார் என்று யாரோ நையாண்டிக்காக உருவாக்கிய பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சன் நியூஸ் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டது போலவும், உசைன் போல்ட் இந்த கருத்தை கூறியதாகவும் பலரும் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். இந்த நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், சன் நியூஸ் வெளியிடும் நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்டுக்கும் இதற்கும் வித்தியாசம் இருந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன. இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

நையாண்டிக்கு வெளியிட்ட பதிவு என்றாலும் ஃபேக்ட் செக் செய்ய வேண்டி இருந்ததால், உசைன் போல்டின் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அவரது சமூக ஊடக பக்கங்களையும் பார்த்தோம். அதில் ஆளுநர் ரவி பற்றி எதுவும் பதிவுகளை அவர் வெளியிடவில்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு நையாண்டியானது, போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாடு ஆளுநர் ரவியைப் பார்த்து வியந்தேன் என்று உசைன் போல்ட் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆளுநர் ரவியை பார்த்து வியந்தேன் என்று உசைன் போல்ட் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False