FACT CHECK: பிரதமர் மோடிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்?- வதந்தியை நம்பாதீர்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பிரதமர் மோடிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட வீடியோ போல ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி சிலருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, சீக்கியர் ஒருவரும் மற்றொருவரும் இணைந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர். அவற்றை பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி செல்கிறார்.

நிலைத் தகவலில், “மோடிக்கு #விவசாயிகள் நேரடியா தெரிவிச்ச இந்த எதிர்ப்ப இந்தியாவின் விலைபோன ஊடகங்கள் ஏதும் ஒளிபரப்பல…😏🚶ஓடி ஒளியுறத பாரு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை ஷாகுல் ஹமீத் என்பவர் 2020 டிசம்பர் 31ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவைப் பார்க்கும்போது நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்துக்குள் நடந்த பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் விவசாயிகள் அனுமதிக்கப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்தது. எனவே, இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது. குரல் எழுப்பியவர்கள் யார் என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினத்தையொட்டி நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது ஆம் ஆத்மி கட்சி எம்.பி-க்கள் விவசாய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள் என்று செய்திகள் கிடைத்தன. அதில் ஒரு செய்தியில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மற்றும் மக்களவை உறுப்பினர் பகவந்த் மான் ஆகியோர் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள் என்றும் இதை சஞ்சய் சிங் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive 1 I dailypioneer.com I Archive 2

அதன் அடிப்படையில் அவருடைய ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பியதாக அவர் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். ஆம் ஆத்மி கட்சியும் கூட இந்த வீடியோவை வெளியிட்டிருந்தது.

Archive 1 I twitter.com I Archive 2

இவர்கள் இருவரும் விவசாயிகளா என்று என்று பார்த்தோம். பகவந்த் மான், சஞ்சய் சிங் ஆகியோர் விவசாயிகளா என்று பார்த்தோம். பகவந்த் மான் பஞ்சாபி மொழியில் தொழில்முறை நகைச்சுவையாளராக இருந்துள்ளார். சஞ்சய் சிங் சுரங்கத் துறையில் பட்டயப் படிப்பை முடித்து பணியாற்றியுள்ளார். சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தியுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. 

சஞ்சய் சிங் பயோ டேடாவை ராஜ்ய சபா பக்கத்திலிருந்து எடுத்தோம். அதில் தன்னுடைய தொழிலாக அவர் அரசியல் மற்றும் சமூக சேவை என்று குறிப்பிட்டிருந்தார்.

பகவந்த் சிங்கின் தொழில் பற்றி மக்களவை இணையதளத்தில் தேடினோம். அதில் அவர் தன்னை அரசியல்வாதி, சமூக சேவகர், நடிகர், காமெடியன் என்று குறிப்பிட்டுள்ளார். 

Archive

இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி எம்.பி-க்கள் டிசம்பர் 25, 2020 வாஜ்பாய் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி முன்னிலையில் கோஷம் எழுப்பியதை விவசாயிகள் கோஷம் எழுப்பியதாக தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. 

முடிவு:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி எம்.பி-க்கள் கோஷம் எழுப்பியதை விவசாயிகள் கோஷம் எழுப்பினார்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:FACT CHECK: இந்திய தேசியக் கொடியை செருப்பால் அவமதித்த விவசாயிகள் என்று பகிரப்படும் பழைய படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False