‘’கேரளாவில் தேசியக் கொடி ஏற்ற உதவி செய்த பறவை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’கேரளாவில் தேசியக் கொடி ஏற்றும் பொழுது சிக்கிக் கொண்டது திடீரென வந்த பறவை அதை பறக்க விடுகிறது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15, 2024 அன்று 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், கேரளாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வு ஒன்றில், மேலே ஏற்றப்பட்ட கொடி பறக்காமல் சிக்கிக் கொண்டதாகவும், அதனை எங்கிருந்தோ பறந்து வந்த பறவை சரிசெய்து, நன்றாக பறக்கச் செய்துவிட்டு சென்றதாகவும் கூறி மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்கள் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், இது உண்மையல்ல. ஆம். இவர்கள் பகிர்ந்து வரும் வீடியோவின் மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட பதிவு நமக்கு காண கிடைத்தது. அதில், தேசியக்கொடி கம்பத்திற்கும், பறவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாகக் காண முடிகிறது.

X Post Link

இதன்படி, தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பத்திற்கும், பறவை வந்து அமரக்கூடிய தென்னை மரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவருகிறது. கொடி கம்பத்திற்கு பின்னால்தான் அந்த தென்னை மரம் உள்ளது. தேசியக்கொடி ஏற்றப்படும் நேரத்திற்கும், அந்த பறவை வந்து மரத்தில் உட்கார்ந்துவிட்டு, பறந்து செல்லும் நேரத்திற்கும் ஒத்துப் போகும் வகையில் உள்ளது.

ஆனால், எதேச்சையாக பார்ப்போருக்கு பறவை வந்து தேசியக் கொடியேற்ற உதவியது போன்று காட்சிப் பிழை ஏற்பட்டுள்ளது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:கேரளாவில் தேசியக் கொடியேற்ற பறவை உதவி செய்ததா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING