FIFA உலகக் கோப்பை தொடக்க விழாவில் ஜாகீர் நாயக் உரை கேட்டு நான்கு பேர் மதம் மாறினார்களா?

சமயம் சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடக்க விழாவில் ஜாகீர் நாயக்கின் உரையைக் கேட்டு நான்கு பேர் உடனடியாக இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அரபியில் ஒருவர் சொல்ல, அதை மற்றவர்கள் சொல்வது போன்று வீடியோ உள்ளது. நிலைத் தகவலில், “FIFA உலகக் கிண்ண ஆரம்ப நிகழ்வில் ஷாகிர் நாயக்கின் உரையைக் கேட்ட  

4 பேர் இஸ்லாத்தை தழுவினர்..!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Mohamed Sameen என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கத்தாரில் தொடங்கியது. தொடக்க விழாவில் இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் உசேன் பங்கேற்று மத பிரசாரம் செய்தார் என்பது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், உண்மையில் அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடந்தது போன்று தெரியவில்லை. எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது. இந்த வீடியோ கத்தார் கால்பந்து தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்தது. இந்த வீடியோவை abdelghani boudra என்ற யூடியூப் பக்கம் 2016 மே 27ம் தேதி பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. அதில், “கட்டாராவில் (கத்தார்) ஜாகீர் நாயக்கின் சொற்பொழிவுக்குப் பிறகு நான்கு பேர் இஸ்லாம் மதத்துக்கு மாறினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

தொடர்ந்து தேடிய போது அல்ஜசீரா தொலைக்காட்சி இந்த வீடியோவை 2016ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. அதில், “டாக்டர் ஜாகிர் நாயக் என்ற இஸ்லாமியப் போதகரின் “கடவுள் இருக்கிறாரா?” என்ற சொற்பொழிவுக்குப் பிறகு நான்கு பேர் இஸ்லாத்தைத் தழுவுவதாக அறிவிக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இதன் மூலம் இது கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், கத்தார் உலகக் கோப்பை போட்டி தொடக்க விழாவில் ஜாகீர் நாயக் உரையைக் கேட்டு நான்கு பேர் இஸ்லாமுக்கு மதம் மாறினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உலக கோப்பை கால்பந்தாட்ட தொடக்க விழாவில் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய மத பிரசாரம் நடந்ததாகவும் அதைத் தொடர்ந்து நான்கு பேர் இஸ்லாம் மதத்தை ஏற்றதாகவும் பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:FIFA உலகக் கோப்பை தொடக்க விழாவில் ஜாகீர் நாயக் உரை கேட்டு நான்கு பேர் மதம் மாறினார்களா?

Fact Check By: Chendur Pandian 

Result: False