20 ஆயிரம் புத்தகம் படித்ததாகக் கூறிய அண்ணாமலையை கேலி செய்து அட்டைப்படம் வெளியிட்டதா துக்ளக்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

20 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களைப் படித்திருக்கிறேன் என்று அண்ணாமலை கூறியதைக் கிண்டலடித்து துக்ளக் அட்டைப்படம் வெளியிட்டதாக புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive

துக்ளக் அட்டைப்பட ஓவியம் பகிரப்பட்டுள்ளது. இரண்டு கழுதைகள் பேசக்கொள்வது போல ஓவியம் உள்ளது. அதில், “இதுவரை 20 ஆயிரம் புத்தகங்களை தின்னுருக்கேன்,நீ எத்தனை தின்னுருக்கே” என்று இருந்தது. இந்த பதிவை Kavi Mangal என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மார்ச் 19ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பா.ஜ.க ஆதரவு ஊடகமான துக்ளக், தமிழ்நாடு பாஜக தலைவரை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டது என்று கிண்டல் செய்யும் வகையில் யாரே வெளியிட்ட பதிவை, பலரும் ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இந்த ஓவியம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட துக்ளக் அட்டைப் படத்தில் தேதி அழிக்கப்பட்டிருந்தது. மேலும் “இதுவரை 20 ஆயிரம் புத்தகங்களை தின்னுருக்கேன்,நீ எத்தனை தின்னுருக்கே” என்று எழுதப்பட்டுள்ள பகுதி தனியாகச் சேர்க்கப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. வேறு பலர் வெளியிட்ட பதிவுகளில் தேதி அழிக்கப்படவில்லை. அதில் 11-11-2020 என்று தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. 2020ம் ஆண்டு நவம்பரில் அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக இல்லை. மேலும் அவர் 2022 மார்ச் மாதத்தில்தான் 20 ஆயிரம் புத்தகம் படித்துள்ளேன் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இவை எல்லாம் இந்த அட்டைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்தன.

துக்ளக் இதழின் சமீபத்திய அட்டைப் படத்தைப் பார்த்தோம். அதில் கழுதைகள் அட்டைப்படம் இல்லை. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் நான்கில் பாஜக வெற்றி பெற்றதை வைத்து பத்திரிகையாளர்களை விமர்சித்து அட்டைப்படம் வெளியிட்டிருந்தனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை மிகத் தீவிரமாக எதிர்க்கிறார் என்று அண்ணாமலையை புகழ்ந்து கருத்துப்படமும் வெளியாகி இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: thuglak.com 

அதனால், 11-11-2020ல் வெளியான துக்ளக் அட்டைப் படத்தைப் பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று துக்ளக் அட்டைப்படம் இருந்தது. ஆனால் அதில், “சரிவிடு, இது உண்மையா இருந்தா நம்ம கூட்டத்தைச் சேர்ந்த ஒருத்தருடைய ஆட்சிதான் வரும். நமக்கு தீனிக்குப் பஞ்சம் இருக்காது” என்று இருந்தது. ரஜினிகாந்த் சொந்த கட்சி தொடங்குவது சந்தேகமே என்ற செய்தியை வைத்து அந்த கார்ட்டூனை வெளியிட்டிருந்தனர். இந்த கார்ட்டூனை எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியாகிறது.

துக்ளக் சமீபத்திய இதழில் அண்ணாமலை விமர்சித்து பதிவு வெளியாகவில்லை. உண்மையில் அவரை புகழ்ந்து கருத்துப் படத்தை வெளியிட்டுள்ளனர். 11-11-2020 என்று தேதியிடப்பட்ட துக்ளக் இதழில் ரஜினி அரசியல் வருகையை வைத்து கழுதை அட்டைப்படம் வெளியிட்டிருப்பதை உறுதி செய்துள்ளோம். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் எடிட் செய்யப்பட்டது என்று உறுதியாகிறது.

முடிவு:

அண்ணாமலையை விமர்சித்து துக்ளக் அட்டைப்படம் வெளியிட்டதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:20 ஆயிரம் புத்தகம் படித்ததாகக் கூறிய அண்ணாமலையை கேலி செய்து அட்டைப்படம் வெளியிட்டதா துக்ளக்? ?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered