
பா.ம.க-வைப் போல நாங்கள் வன்னியர்களை நம்பி கட்சி நடத்தவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் படத்துடன் புதிய தலைமுறை மற்றும் பாலிமர் தொலைக்காட்சிகள் வெளியிட்ட நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன. புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டில் “பாமகவை போல் நாங்கள் ஒன்றும் வன்னியர்களை நம்பி கட்சி நடத்தவில்லை! பொண்முடியின் பேச்சுக்கு வேல்முருகன் ஆதரவு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை கிராமத்து ரசிகன் காழியப்பநல்லூரின் காதலன் என்ற ஃபேஸ்புக் ஐடியை சேர்ந்த நபர் 2021 மார்ச் 24 அன்று பகிர்ந்துள்ளார்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டில், “வன்னியர் வாக்குகளை நம்பி திமுக இல்லை. வன்னியர் இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது. திமுக பொன்முடியின் கருத்துக்கு தவாக தலைவர் வேல்முருகன் ஆதரவு” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை அமாவாச – Naga Raja Chozhan MA என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மார்ச் 24 அன்று பகிர்ந்திருந்தது. பலரும் இதை ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
வன்னியர் ஓட்டு வேண்டாம் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரல் ஆனது. அது போலியானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தொடர்ந்து வன்னியர் சமுதாயத்தை தி.மு.க அவமரியாதை செய்துவிட்டது என்று பல போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பரவியது. அவற்றை ஆய்வு செய்து பார்த்த போது அவை எல்லாம் போலியானவை என்று உறுதியானது. ஆனாலும் மீண்டும் மீண்டும் வதந்தி பரவி வருகிறது.
வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறவில்லை!
வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா?
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என எ.வ.வேலு கூறினாரா?
பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார். அவர் தி.மு.க-வுக்கு வன்னியர் வாக்கு தேவையில்லை என்று கூறியதாக புதிதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஒரு தொலைக்காட்சி நியூஸ் கார்டு மட்டுமின்றி இரண்டு தொலைக்காட்சிகளின் நியூஸ் கார்டை பயன்படுத்தி வெளியிட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக புதிய தலைமுறை நியூஸ் கார்டில் பொன்முடி என்பதை பொண்முடி என்று தவறாக வேறு குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கமான தமிழ் ஃபாண்ட், பின்னணி டிசைன் எதுவும் இல்லை என்பதால் இது போலியானது என்று தெரிந்தது. இருப்பினும் இதையும் நூற்றுக் கணக்கானோர் ஷேர் செய்யவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளைப் பார்த்தோம். அப்படி எதுவும் இல்லை. எனவே, இது போலியானது என்பதை உறுதி செய்யும்படி புதிய தலைமுறை தொலைக்காட்சி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
பாலிமர் தொலைக்காட்சியில் வெளியானது போன்ற நியூஸ் கார்டில் 2021 மார்ச் 11 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த தேதியில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது, “வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு. பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் த.வா.க போட்டியிடும்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து பகிர்ந்திருப்பது தெரிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி அருணுக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி உண்மையா, போலியா என்பதை உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டோம். அவரும் இதை போலியானது என்று உறுதி செய்தார்.
இது தொடர்பாக கருத்தை அறிய வேல்முருகனைத் தொடர்புகொண்டோம். தேர்தல் பிரசாரத்தில் பிசியாக இருந்த சூழலில் அவருடைய உதவியாளர் காமராஜ் நம்மிடம் பேசினார். “இது போல் தொடர்ந்து தவறான தகவலை சிலர் வேண்டுமென்றே பதிவிட்டு வருகின்றனர். இப்படி அவர் பேசவில்லை” என்றார்.
வேல்முருகன் தரப்பு மற்றும் இரண்டு தொலைக்காட்சிகளைச் சேர்ந்த டிஜிட்டல் பிரிவு நிர்வாகிகளும் மறுப்பு தெரிவித்ததின் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டுகள் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க-வுக்கு வன்னியர் வாக்கு தேவையில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:வன்னியர்களை நம்பி கட்சி நடத்தவில்லை என்று வேல்முருகன் பேசியதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
