
ராகுல் காந்தி பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ஒரு மாதிரி யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரசார வாகனத்தில் இருக்கும் ராகுல் காந்தியுடன் பெண் ஒருவர் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அந்த”பாத யாத்திரை” பின் “பாதிரி யாத்திரை”யாக மாறி இப்பொழுது “ஒரு மாதிரி யாத்திரை”யாக தொடர்கின்றது……🤔 பப்புவுக்கு மப்பு அதிகமாய்ட்டுது.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Anantha Raman என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 செப்டம்பர் 14ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்திய ஒற்றுமை யாத்திரையைக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையை பா.ஜ.க-வினர் விமர்சித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, கிறிஸ்தவ பாதிரியார்களைச் சந்தித்தார். ராகுல் காந்தி பாதிரியார்களை சந்தித்ததைத் தவறானது என்று குறிப்பிட்டு பா.ஜ.க-வினர் விமர்சனம் செய்தனர். ஆனால் ராகுல் காந்தியே தன்னுடைய நடை பயணத்தில் அனைத்து மதத்தினரையும் சந்தித்துப் பேசி வருகிறார்.
தற்போது, பெண்களுடன் யாத்திரை செல்கிறார் ராகுல் காந்தி… யாத்திரை ஒரு மாதிரியான யாத்திரையாக மாறிவிட்டது என்று ஒரு புகைப்படத்தை வைத்து பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive 1 I zeenews.india.com I Archive 2
புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த புகைப்படம் 2017ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதியிலிருந்து சமூக ஊடகம், செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.
இந்த புகைப்படம் பற்றித் தொடர்ந்து தேடினோம். அப்போது, 2017ம் ஆண்டு குஜராத்தில் பிரசாரம் செய்த ராகுல் காந்தியை பெண் ஒருவர் சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொண்டார் என்று செய்திகள் வெளியாகி இருப்பது தெரிந்தது. இது தொடர்பான வீடியோக்களும் கூட நமக்குக் கிடைத்தன.
2017ம் ஆண்டில் ராகுல் காந்தி பிரசாரத்தின் போது பெண் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எடுத்து, 2022ல் நடந்து வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது பெண்களுடன் ராகுல் காந்தி நெருக்கமாக இருக்கிறார் என்பது போன்று விஷமத்தனமான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி பெண்களுடன் நெருக்கமாக உள்ளார் என்று பரவும் படம் 2017ம் ஆண்டு குஜராத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பெண்களுடன் புகைப்படம் எடுத்தாலே தப்பா?- ராகுல் காந்தி பற்றி பரவும் விஷம பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False
