அண்ணாமலையுடன் மோதல் காரணமாக அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்தாரா பிடிஆர்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

என் செருப்புக்குக் கூட சமம் இல்லை என்று அண்ணாமலை தாக்கியதால், அரசியலை விட்டு வெளியேறப் போவதாக நிதியமைச்சர் பி.தியாகராஜன் (பிடிஆர்) ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

“18 மாதங்களுக்கு முன்பு என்னுடைய பணி வாழ்வை விட்டுவிட்டு அரசியலில் நுழைந்து பிறகு இன்று முதன் முறையாக தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது” என்ற வகையில் ஆங்கிலத்தில் இருந்த ட்வீட் உடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், “அண்ணாமலை அடித்த அடியில் அரசியலை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்த பன்னிக்குட்டி PTR. சரியான அழுகுணி பயலா இருப்பான் போல !” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Kumari Jeyan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 செப்டம்பர் 1ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு அரசின் நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் (பிடிஆர்) தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ட்விட்டரில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்டது. அதில் இருந்து இருவருக்கும் இடையே ட்விட்டரில் சண்டை நடந்து வருகிறது. இதில் உச்சக்கட்டமாக நிதியமைச்சர் பி தியாகராஜனை என் செருப்புக்கு ஈடாக மாட்டீர்கள் என்று மிகக் கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை. 

இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த விமர்சனத்தால் அரசியலிலிருந்து விலகப்போவதாக பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் பலரும் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்து வருகின்றனர். செப்டம்பர் 1, 2022 அன்று அந்த ட்வீட் வெளியானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் பிடிஆர் அப்படி ஒரு ட்வீட் வெளியிட்டாரா என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தை பார்த்தோம். ஆனால், செப்டம்பர் 1ம் தேதி அப்படி ஒரு ட்வீட் எதுவும் வெளியாகவில்லை. எனவே, போலியாக ட்வீட் உருவாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

மேலும், அரசியலுக்கு வந்து 18 மாதங்கள் ஆகின்றது என்று அவர் கூறியதாக உள்ளது. அவர் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே எம்.எல்.ஏ ஆகிவிட்டார். அப்படி இருக்கும் போது அரசியலுக்கு வந்து 18 மாதங்கள் அதாவது ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகிறது என்று அவர் எப்படிக் கூறுவார் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, அந்த ட்வீட்டில் உள்ள பதிவை அப்படியே டைப் செய்து தேடினோம். அப்போது, இந்த ட்வீட்டை பழனிவேல் தியாகராஜன் 2017ம் ஆண்டு வெளியிட்டிருப்பது தெரிந்தது.

Archive

நீட் தேர்வு காரணமாக அனிதா தற்கொலை செய்து கொண்ட போது இந்த ட்வீட்டை பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதிலும் கூட அரசியலை விட்டு விலகப்போகிறேன் என்று எல்லாம் பழனிவேல் தியாகராஜன் கூறவில்லை. 2017ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட ட்வீட்டை எடிட் செய்து 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வெளியானது போல மாற்றி, விஷமத்தனமான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. 

முடிவு:

அண்ணாமலை அடித்த அடியில் அரசியலை விட்டு வெளியேறப் போவதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார் என்று பரவும் பதிவு தவறானது, எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலையுடன் மோதல் காரணமாக அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்தாரா பிடிஆர்?

Fact Check By: Chendur Pandian 

Result: False