மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை அடித்து கைது செய்ததா இந்திய ராணுவம்?

Communal இந்தியா | India

மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை இந்திய ராணுவத்தினர் அடித்து கைது செய்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமியர்களை சில காவலர்கள் அடித்து வேன் ஒன்றில் ஏற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்ட அமைதி மார்கத்தை அமைதியான முறையில் கவனித்த இந்திய ராணுவத்தினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை இந்திய ராணுவத்தினர் அடித்து உதைத்து கைது செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டிலிருந்து இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது. என்டிடிவி இந்தி-யிலும் இந்த வீடியோ தொடர்பான செய்தி 2020ம் ஆண்டில் வெளியாகி இருப்பதைக் கண்டோம்.

Archive

என்டிடிவி வெளியிட்டிருந்த செய்தியைப் பார்த்தோம். அதில் 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலிலிருந்தது. அப்போது மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லமில் தடையை மீறி ஒன்று கூடித் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நமக்குக் கிடைத்த சமூக ஊடக பதிவுகளிலும் இதே தகவல் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: ndtv.in I Archive

இதன் மூலம் மத்தியப் பிரதேசத்தில் நடந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு தடையை மீறிய இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்ட வீடியோவை எடுத்து 2025ல் மேற்கு வங்க கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2020ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் கொரோனா ஊரடங்கை மீறி தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்ட வீடியோவை மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்ட காட்சி என்று தவறாக சமூக ஊடகங்களில் பரப்பி வருவதை தகுந்தஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை அடித்து கைது செய்ததா இந்திய ராணுவம்?

Fact Check By: Chendur Pandian 

Result: False