
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நேற்று, இரண்டு என இரண்டு புகைப்படங்களை ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நேற்று பகுதியில், “மாணவன் தனுஷ் நீட் தேர்வால் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம்” என்றும் இன்று பகுதியில் “நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Troll Mafia என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 செப்டம்பர் 13ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வழங்க வலியுறுத்தி மசோதா நிறைவேற்றப்பட்டது. பா.ஜ.க தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. இந்த சூழலில், நீட் தேர்வுக்கு அ.தி.மு.க-வும் எதிர்ப்பு தெரிவித்தது போன்று பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா 2021 செப்டம்பர் 13ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், “நீட் தேர்வு காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகவும் வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டது தொடர்பாகவும்” கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அ.தி.மு.க கொண்டு வந்தது.
நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. அப்போது, மாணவர் தற்கொலைக்கு முழு காரணம் தி.மு.க அரசு தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிப் பேசினார். அவர் கூறிய சில கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
சட்டப்பேரவைக்கு வெளியே பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, இரண்டு பிரச்னைகள் தொடர்பாக தி.மு.க அரசு சரியான பதிலை அளிக்காத காரணத்தால் வெளிநடப்பு செய்வதாக கூறியிருந்தார். இது தொடர்பாக வெளியான வீடியோவை தேடி எடுத்தோம். அவர் பேட்டி அளித்த போது, நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “அதை நாங்கள் ஆதரிப்போம்” என்று கூறியதைக் காண முடிந்தது. வீடியோவின் 4.15வது நிமிடத்தில் இதைக் காணலாம்.
அதைத் தொடர்ந்து மீண்டும் சட்டப்பேரவைக்குள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் திரும்பி, நீட் விலக்கு மசோதா நிறைவேற்ற தங்கள் ஆதரவை அளித்தனர். இது தொடர்பாக அப்போது வெளியான செய்திகள் பல நமக்குக் கிடைத்தன.
மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க-வுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் பேசியிருந்தார். அது தொடர்பான செய்தி கலைஞர் செய்திகள் இணையதளம் உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகி இருந்தது.

அசல் பதிவைக் காண: kalaignarseithigal.com I Archive
நம்முடைய ஆய்வில்,
1) நீட் தேர்வு காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது, வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்ததை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2) நீட் விலக்கு மசோதா பா.ஜ.க தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3) நீட் விலக்கு மசோதா நிறைவேற வாக்களித்த அ.தி.மு.க-வுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறிய செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நீட் விலக்கு மசோதாவை எதிர்த்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நீட் விலக்கு தீர்மானத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
