தி.மு.க ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு என்று ஒன்று கிடைக்காது, கிடைக்கவும் விட மாட்டேன் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், "அண்ணாமலை அதிரடி. தி.மு.க ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு என்று ஒன்று கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டேன்" என்று இருந்தது.

நிலைத் தகவலில், "பாஜகவ ஊத்தி மூட வேற யாரும் வேண்டாம் ... ஆட்டுக்குட்டியே போதும் சனிஸ்வரன் இது வாயில தான் சனிபெயர்ச்சியே பண்ணும் போல.." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Devi Kamal என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 6ம் தேதி பதிவிட்டுள்ளார். இந்ந நியூஸ் கார்டை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டுக்கான உரிமை. அதைத் தர முடியாத என்று மத்திய அரசு கூற முடியாது. ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி அண்ணாமலைக்கு இது கூடவா தெரியாமல் இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

கதிர் என்ற இணைய ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அப்போது, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு கதிர் வெளியிட்டிருந்த பதிவு நமக்கு கிடைத்தது. மேலும் அந்த ஊடகம் வெளியிட்டிருந்த அசல் நியூஸ் கார்டும் கிடைத்தது.

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2

அதில், "1972ல் இருந்து காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் செய்து குளிர் காய்ந்த ஒரே கட்சி தி.மு.க - அண்ணாமலை அதிரடி" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

ஆகஸ்ட் 5, 2021 அன்று தஞ்சாவூரில் தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் காவிரியில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக பா.ஜ.க அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அந்த பேச்சின் போது இப்படி ஏதும் கூறினாரா என்று பார்த்தோம். தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

அதற்கு அவர், "அண்ணாமலை இப்படி பேசவில்லை" என்று உறுதி செய்தார். மேலும், "அண்ணாமலை அப்படி பேசியிருந்தால் அது அனைத்து ஊடகங்களிலும் வந்திருக்கும். சமூக ஊடகங்களில் விஷமத்தனமாக தவறான தகவலைச் சிலர் பரப்பி வருகின்றனர்" என்றார்.

இதன் மூலம் தி.மு.க ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு என்று ஒன்று கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் நிதி பங்கீடு கிடைக்க விடாமல் தடுப்பேன் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு கிடைக்க விடமாட்டேன் என அண்ணாமலை கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False