
ஒன்றுமில்லாத பொள்ளாச்சி பாலியல் பிரச்னையை தி.மு.க ஊதி பெரிதாக்குகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
முதலமைச்சர் பழனிசாமி படத்துடன் கூடிய நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! பொள்ளாச்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பெண்களுக்கு பாதுகாப்பானதுதான். ஒன்றுமில்லாத பிரச்சினையை திமுக ஊதி பெரிதாக்குகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
நிலைத் தகவலில், “பெல்ட்டால் அடிக்காதீங்க அண்ணா லெக்கின்ஸ கழட்டுறேன்னு அழுத அந்த பெண்ணின் கதறல் ஒன்றுமில்லாத பிரச்சினையா பழனிசாமி….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Panju Aravindan என்பவர் 2021 மார்ச் 21 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை ஒன்றுமில்லாத பிரச்னை என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியதாக நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நியூஸ் கார்டு பார்க்க நியூஸ் ஜெ வெளியிட்டது போலவே உள்ளதால் பலரும் இது உண்மை என்று கருதி பகிர்ந்து வருவது தெரிகிறது.
இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம். முதலில் நியூஸ் ஜெ வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். ஆனால், பொள்ளாச்சி சம்பவம் பற்றி முதலமைச்சர் பேசியதாக எந்த தகவலும் இல்லை. அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி படம் இருக்கும் நியூஸ் கார்டு கிடைத்தது.
அதை எடுத்துப் பார்த்தபோது, “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம். கருணாநிதி முதலமைச்சரான பிறகுதான் ஊழலே துவங்கியது; அதற்கு முன்னர் தமிழ்நாட்டில் ஊழலே இல்லை” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்திருப்பது தெரிந்தது.
இதை உறுதி செய்ய நியூஸ் ஜெ டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த கலிஃபுல்லாவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர் “இது நாங்கள் வெளியிட்டது இல்லை. போலியான நியூஸ் கார்டு” என்று உறுதி செய்தார்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பொள்ளாச்சி சம்பவம் பற்றி முதலமைச்சர் பழனிசாமி என்ன சொல்லியுள்ளார் என்று தெரிந்துகொள்ள அது தொடர்பான செய்தியைத் தேடினோம். அப்போது 2019ல் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு ஒன்று கிடைத்தது. அதில், “பொள்ளாச்சி பாலியல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இதில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் குற்றவாளிகளுடன் தி.மு.க மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் நெருங்கிப் பழகியுள்ளார். அதைப்பற்றியெல்லாம் பேசாமல், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் குடும்பத்தின்மீது ஸ்டாலின் வீண்பழி சுமத்திவருகிறார். ஜெயராமன் பற்றி பொள்ளாச்சி மக்களுக்கு நன்கு தெரியும்” என்று பழனிசாமி பேசியதாக குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: vikatan.com I Archive 1 I news18.com I Archive 2
இந்த ஆண்டு அந்தியூரில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, “, யார் தவறிழைத்தாலும் அதிமுக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்தார். ஒன்றுமில்லாத பிரச்னை என்று அவர் பேசினார் என்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
நம்முடைய ஆய்வில்,
பொள்ளாச்சி விவகாரம் ஒன்றுமில்லாத பிரச்னை என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நியூஸ் ஜெ தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை ஒன்றுமில்லாத பிரச்னை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஒன்றுமில்லாத பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பெரிதாக்கும் தி.மு.க என்று முதல்வர் பழனிசாமி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered

உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா, ஆராய்ச்சியாளர்…? இது உங்களுக்கு தேவை இல்லாத வெட்டி ஆராய்ச்சி. இவ்வளவு சென்சிட்டிவான, சீரழிவான தொடர் சம்பவங்களுக்கு எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா…? அரசு நடவடிக்கைகள் பற்றி ஆராய்ச்சி செய்து உங்கள் அறிக்கையை வெளியிடலாமே…? ஏன், உங்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால்தான் நீங்கள் விழிப்புணர்வோடு செயல்படுவீர்களோ…?