
‘’தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனத்தை திமுக.,வினர் கல் வீசியும், கொடிக் கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
பாஜக தமிழ்நாடு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள இந்த பதிவில், ‘’ தமிழுக்கும், சைவத்துக்கும் பெரும் தொண்டாற்றி வரும் தருமபுரம் ஆதீனத்தின் விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதினத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆளுநர் பயணித்த காரின் மீதும், உடன் சென்ற வாகனங்கள் மீதும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி, தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
தருமபுரம் ஆதினத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை வழிமறித்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தினர். இதன்போது, ஆளுநரின் வாகனம் மீது திமுக.,வினர் கற்கள் மற்றும் கொடிக் கம்புகளை வீசி தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வீடியோ ஆதாரங்களுடன் பதிவு வெளியிட்டிருந்தார்.
அவரை தொடர்ந்து, இதர பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை கண்டித்து, சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையில், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆளுநர் வாகனத்தை குறி வைத்து கொடிக் கம்புகளை சிலர் எறிந்தாலும், நல்லவேளையாக, வாகனம் எந்த சேதமும் இன்றி குறிப்பிட்ட இடத்தைக் கடந்துவிட்டதாக, ஆளுநரின் மெய்க்காப்பாளர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், குறிப்பிட்ட இடத்தில் ஆளுநரின் வாகனம் கடந்து சென்ற பிறகு, அவரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் போராட்டத்திற்கு வந்த நபர்கள் கொடிக் கம்புகளை வீசியதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, ஆளுநரின் வாகனத்திற்கு எந்த பாதிப்பும் நிகழவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, ஆளுநரின் வாகனம் கடந்து சென்ற பிறகு, கான்வாயில் உள்ள இதர வாகனங்களின் மீது கொடிக் கம்புகள் வீசப்பட்டதாக, தெரிகிறது. அதேசமயம், ஆளுநரின் வாகனம் சேதமின்றி சம்பவ இடத்தைக் கடந்துவிட்டது. இதுபற்றி காவல்துறை வழக்குப் பதிந்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த நிகழ்வு கண்டித்தக்க ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் பற்றிய உண்மையை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் எடுத்துக் கூறியுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனம் தாக்கப்பட்டதா?- முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: Explainer
