ரசீது இல்லா தங்கத்துக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க திட்டமா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

பொது மக்கள் வைத்திருக்கும் தங்கத்துக்கு ரசீது இல்லை என்றால் அதற்கு அதிகப்படியான அபராதம் விதிக்கும் திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Gold 2.png
Facebook LinkArchived Link

பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் கூடிய போட்டோகார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நடுத்தர மக்களின் சிறுசேமிப்புக்கு ஆப்பு” என்று தலைப்பிட்டுள்ளனர். மேலும், “மக்கள் ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு திட்டம்” என்று போட்டோஷாப்பில் டைப் செய்யப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “கருப்பு பணத்தை ஒழிக்க மோடியின் அடுத்த திட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, எழுச்சி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 நவம்பர் 6ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்துக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக Economic Times, Financial Express உள்ளிட்ட ஊடகங்கள் 2019 அக்டோபர் 30ம் தேதி செய்தி வெளியிட்டன. இதன் அடிப்படையில் தமிழ் ஊடகங்களிலும் செய்தி வெளியானது. 

Gold 3.png
Economic TimesArchived Link 1
Financial ExpressArchived Link 2

அந்த செய்தியில், “தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருக்கும் கணக்கில் வராத தங்கத்தை மதிப்பீடு செய்ய, தங்க பொது மன்னிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. ரசீது இல்லாமல் இருக்கும் மூதாதையர் தங்கத்துக்கும் வரி செலுத்தி முறையான தங்கமாக மாற்றிக் கொள்ளலாம். இதன்மூலம் கிடைக்கும் வரிப்பணத்தை பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்துக்கு பயன்படுத்த உள்ளனர்” என்று கூறப்பட்டு இருந்தது.

நாடு முழுவதும் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நேரடியாக மத்திய அமைச்சரோ, அதிகாரிகளோ எதுவும் கூறவில்லை. மத்திய நிதி அமைச்சக சோர்ஸ் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

Archived Link

இதைத் தொடர்ந்து அக்டோபர் 31ம் தேதி கணக்கில் வராத, ரசீது இல்லாத  தங்கத்துக்கு பொது மன்னிப்பு அளிப்பது போன்ற  ஒரு திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று Economic Times உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியானது.

Economic TimesArchived Link

ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நேரத்தில் (அதாவது அக்டோபர் 31ம் தேதி) தமிழில், கலைஞர் செய்திகள், தீக்கதிர் உள்ளிட்ட இணையதளங்களில் ‘வீட்டு தங்கத்துக்கு ஆபத்து’- ரசீது இல்லாத நகைகளுக்கு அபராத வரி வசூலிக்க மோடி அரசு முடிவு!, ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அபராத வரி! என்று செய்தி வெளியாகின. இந்து தமிழ், குட் ரிட்டர்ன் போன்ற ஊடங்களில் மறுப்பு செய்தி வெளியாகி உள்ளது.

Gold 4.png
kalaignarseithigal.comArchived Link 1
theekkathir.inArchived Link 2
hindutamil.inArchived Link 3

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், மத்திய அரசு தரப்பிலிருந்து மறுப்பு வந்து ஒரு வாரம் ஆன நிலையில் பழைய செய்தியை வெளியிட்டுள்ளனர். மறுப்பு செய்தி வெளியானதை மறைத்து அல்லது மறந்து, பழைய தகவலை மட்டும் வைத்து ஃபேஸ்புக் பதிவு வெளியிட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 

நம்முடைய ஆய்வில்

எக்கனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்களில், ரசீது இல்லாத தங்கத்துக்கு அதிக அபராதம் விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக செய்தி வெளியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என்று மத்திய நிதித்துறை அமைச்சக சோர்ஸ் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி கிடைத்துள்ளது.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி அடிப்படையில் எக்கனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களில் தங்கத்துக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ரசீது இல்லாத தங்கத்துக்கு அதிக அபாரதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ரசீது இல்லா தங்கத்துக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க திட்டமா?

Fact Check By: Chendur Pandian 

Result: False