
இத்தாலி தேவாலயம் ஒன்றில் மனிதனைப் போன்று தோற்றமளிக்கும் விநோத பறவை வந்ததாக ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
26 விநாடி ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். சாத்தான் என்று சொல்லப்படுவது போன்று ஒரு உருவம் தேவாலயத்தின் மீது ஏறுகிறது. பின்னர் பறந்து சிலுவையின் மீது அமர்கிறது. பின்னர் சிறகு விரித்து பறக்கிறது.
நிலைத் தகவலில், “இன்று இத்தாலியின் தேவாலயத்தின் உச்சியில் விநோத பறவை தென்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Smeshach Meshach என்பவர் மார்ச் 25, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த வீடியோ அசல் போலத் தெரியவில்லை. கிராஃபிக்ஸ் காட்சி போல உள்ளது. ஆனால், இத்தாலியில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், இன்று எடுக்கப்பட்டது என்று பகிர்ந்து வருகின்றனர். எனவே, இந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், அது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, வீடியோவில் உள்ள “JJPD Producciones” என்ற பெயரை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது இந்த வீடியோ போலியானது என்பதை உறுதி செய்து வெளியான ஆய்வுக் கட்டுரைகள் கிடைத்தன. அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு, JJPD Producciones நிறுவனம் பற்றி ஆய்வு செய்தோம்.

அதன் யூடியூப் பக்கத்தை பார்த்தபோது, வீடியோ ஸ்பெஷல் எஃபெக்ட் செய்யும் நிறுவனம் என்பதும், பேய், கற்பனை காட்சிகள் கொண்ட குறும்படங்கள், பயங்கரமான அமானுஷ்ய கதைகளை வீடியோவாக எடுக்கும் நிறுவனம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
அவர்கள் வெளியிட்ட வீடியோக்கள், ஃபேஸ்புக் வீடியோக்களை எல்லாம் பார்க்கும்போது அமானுஷ்ய உருவங்களை வைத்து எப்படி வீடியோ எடுப்பது என்ற வகையிலேயே இருந்தன.
2019ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி இந்த வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்ததும் தெரிந்தது. அதில் நிகரகுவாவில் உள்ள ஒரு தேவாலயத்தின் மீது பயமுறுத்தும் அரக்கன் என்று வீடியோ வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
மேலும் தேவாலயத்தின் மீது அரக்கன் அமர்ந்திருக்கும் வீடியோ உருவாக்கப்பட்டது எப்படி என்று வீடியோவை அது பிரத்யேகமாக 2019ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த வீடியோவில் வரும் தேவாலயம் நிகரகுவாவில் உள்ளதா என்று தேடினோம். அப்போது அது அந்த நாட்டில் இருப்பது உறுதியானது.
இதன் மூலம்,
இந்த தேவாலயம் இத்தாலியில் இல்லை, நிகரகுவாவில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீடியோ கிராஃபிக்ஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இத்தாலியில் தேவாலயத்தின் மீது விநோத பறவை தென்பட்டது என்று பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இத்தாலி தேவாலயத்தில் விநோத பறவை!- வைரல் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
