அயோத்தியில் பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கிடைத்த அனுமன் சிலையா?

சமூக ஊடகம் | Social சமூகம்

அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தில் தோண்டியபோது அனுமன் சிலை கிடைத்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

HANUMAN 2.png
Facebook LinkArchived Link

பள்ளத்தில் இருக்கும் அனுமன் சிலையை போலீஸ் அதிகாரிகள் பார்வையிடும் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை தோண்டியபோது, ​​நிலத்தில் அனுமனின் சிலை காணப்பட்டது. அயோத்தி ராமரின் நிலம் என்பதை இது காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Yathav என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் டிசம்பர் 9, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் கோவில் கட்ட அளிக்க வேண்டும் என்று நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே ஐந்து ஏக்கர் நிலத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதன் படி, இஸ்லாமியர்களுக்கு வழங்கும் இடத்தை மாநில அரசு தேர்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், நிலத்தை ஒப்படைத்ததாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. ஆனால், நிலத்தை அளித்துவிட்டது போலவும், அங்கே கட்டுமானப் பணிக்கு பள்ளம் தோண்டியது போலவும் அங்கு அனுமார் சிலை கிடைத்தது என்பது போலவும் பதிவிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில், அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலத்தை அரசு தேர்வு செய்துள்ளதா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பற்றிய செய்திகளே கிடைத்தன. 

இதைத் தொடர்ந்து படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படங்கள் சில மாதங்களாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. 

HANUMAN 3.png
Search LinkFacebook LinkArchived Link

நவம்பர் 13ம் தேதி இந்த படத்தை ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவேற்றியிருந்தார். அதாவது தீர்ப்ப வெளியாகி மூன்று நாட்களே ஆகியிருந்தது. அதில், “நில அகழ்வின் போது பஜ்ரங்பலி… ஆதி வடிவம். ஓம் ராமா போற்றி, ஓம் ஹனுமான் போற்றி என்று” குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த அனுமான் சிலை மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட இடமாக இருக்காது என்பது தெளிவானது.

HANUMAN 4.png
Search LinkArticle LinkArchived Link 1samacharofindiaArchived Link 2

இந்த படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம். அப்போது பத்ரிகா என்பது உள்பட சில இந்தி பத்திரிகையில் இது தொடர்பான செய்தி வெளியாகி இருப்பது தெரியவந்தது. அந்த செய்தியை மொழியாக்கம் செய்து படித்துப் பார்த்தோம். அதில், இந்த அனுமான் சிலையானது மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் கிடைத்தது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த செய்தியை 2019 ஜூலை 13ம் தேதி வெளியிட்டிருந்தனர். இதன் மூலம், இந்த அனுமான் சிலையானது பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பு வெளியாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே போபாலுக்கு அருகே கிடைத்துள்ளது என்பது உறுதியானது.

இதன் அடிப்படையில், பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை தோண்டியபோது அனுமான் சிலை கிடைத்தது என்று பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அயோத்தியில் பாபர் மசூதிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கிடைத்த அனுமன் சிலையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False