
‘’பிரியங்கா காந்தி கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
இதே செய்தியை மேலும் சில பேஸ்புக் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளனர்.
Facebook Claim Link | Archived Link |
உண்மை அறிவோம்:
இந்த ஃபேஸ்புக் பதிவுகளில் பகிரப்பட்டுள்ள செய்தி லிங்க், முதலில் டிஎன்நியூஸ்24 இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகும். அதன் தலைப்பில் ‘பிரியங்கா கைது’ என்று கூறியுள்ளனர். இதனை சமூக ஊடகங்களில் பகிரும்போதும், பிரியங்கா கைது என்று எழுதிவிட்டு பின்னர் ஒரு கேள்விக்குறி கூடுதலாகச் சேர்த்துள்ளனர். இருந்தாலும், இது தவறான தலைப்பாகும்.
Tnnews24 Link | Archived Link |
யெஸ் வங்கி விவகாரம் தற்போது பரபரப்பாக நாடு முழுவதும் பேசப்படுவதாக உள்ளது. இதையொட்டி, மேற்கண்ட இணையதளத்தில் சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட ஆசைப்பட்டு, பக்கம் பக்கமாக எழுதியுள்ளனர். செய்தியின் நோக்கம் முதலில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட வேண்டும் என்பதாகவே உள்ளது.
ஆனால், செய்தியின் தலைப்பை எப்படி பார்த்தாலும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுவிட்டார் என்பது போலவே அர்த்தம் வருகிறது. தற்போதைய சூழலில் பிரியங்கா காந்தியை விசாரிக்க அமலாக்கத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமே உண்மை.
அரசியல் நிர்பந்தம் காரணமாக, பிரியங்கா காந்தியிடம் இருந்து ஒரு ஓவியத்தை ரூ.2 கோடி விலைக்கு யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வாங்கியுள்ளார். இதுதான் பிரியங்கா காந்தியின் பெயர் இந்த சர்ச்சையில் அடிபட காரணம். இதுபற்றி விசாரணையின் முடிவில்தான் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவரும்.
அதற்குள்ளாகவே இந்த செய்திக்கு ஒரு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் முடிவுரை எழுதி, பப்ளிஷ் செய்துள்ளனர்.
இதே செய்தியை TOI ஊடகம் எப்படி வெளியிட்டுள்ளது என்பதை பாருங்கள்.
TOI Link | Archived Link |
எனவே, பிரியங்கா கைது செய்யப்படுவாரா அல்லது விசாரணை மட்டுமே நடக்குமா என்பதெல்லாம் தற்போதைய நிலையில் தெரியாத விசயம். கற்பனைக்காக நாம் இந்த செய்தியில் ஒன்றை எழுவது வீண் சர்ச்சையைத்தான் ஏற்படுத்தும்.
இதே செய்தி மற்ற தமிழ் ஊடகங்கள் எப்படி வெளியிட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
HinduTamil Link | Archived Link |
Puthiyathalaimurai Link | Archived Link |
News18 Tamil Link | Archived Link |
எனவே, மற்ற ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கும், நாம் ஆய்வு மேற்கொண்ட செய்திக்கும் இடையே உள்ள வேறுபாட்டை துல்லியமாக உணர முடிகிறது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த செய்தியில் பரபரப்பிற்காக, தவறான தலைப்பிட்டுள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டாரா? பரபரப்பை ஏற்படுத்திய டிஎன் நியூஸ் 24 இணையதளம்!
Fact Check By: Pankaj IyerResult: False Headline
