உத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

உ.பி-யில் தலித் என்பதாலேயே வியாபாரம் செய்த பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

போலீசார் முன்னிலையில் பெண் ஒருவரை அடிக்கும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தலித் பெண் வியாபாரம் செய்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை. அவர்களும் இந்துக்கள் இல்லயா, #பூணுல் மட்டும்தான் #இந்துக்களா காவிநாயே. உபியில் அரங்கேறிய சம்பவம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை Saravanan Gandhi என்பவர் 2020 மே 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமூக ஊடகங்களில் எதற்கெடுத்தாலும் சாதி, மத சாயம் பூசும் செயல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் உ.பி-யில் நடந்த குடும்ப வன்முறை தொடர்பான வீடியோவை தலித் பெண் தாக்கப்படுகிறார் என்று தவறாக பகிர்ந்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவரை போலீசார் முன்னிலையில் மிக மோசமாக தாக்கும் நபர்கள் என்று முதலில் வீடியோ வெளியானது . பிறகு இதே வீடியோவை இஸ்லாமிய பெண்ணை தாக்கும் இந்துக்கள் என்று சில நாட்களுக்கு முன்பு பலரும் பகிர்ந்துவந்தனர். தற்போது தமிழகத்தில் தலித் பெண் என்று சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ தொடர்பான செய்தியை கண்டறிய, முதலில் வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் பெண் மீது தாக்குதல் நடந்தது தொடர்பான செய்தி கிடைத்தது.

uniindia.comArchived Link 1
newstrack.comArchived Link 2
bhaskar.comArchived Link 3


பெரும்பாலும் இந்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்திதான் நமக்கு கிடைத்தன. அதை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது இது சொத்து விற்பனை தொடர்பாக குடும்பத்துக்குள் நடந்த பிரச்னை என்பது தெரியவந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்திருப்பதும், தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக இரண்டு போலீசார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்தி கிடைத்தது.

யு.என்.ஐ செய்தி நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவு நமக்கு கிடைத்தது. அதில், “உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர், ரேஹ்ரா பசார் பகுதியில் பெண்ணை சிலர் தாக்கும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரல் ஆனது. இது தொடர்பாக இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தேவ் ராஜன் வர்மா இது குறித்து கூறுகையில், “பெண்ணை தாக்கும் வீடியோ ட்விட்டரில் வைரல் ஆனது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது போலீசார் அங்கு இருந்துள்ளனர். ஆனால், தாக்குதலை தடுக்க முயற்சிக்கவில்லை. இதனால் அந்த போலீசார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க குடும்ப உறுப்பினர்களுக்குள் நடந்த மோதல். நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரைத் தேடி வருகிறோம்” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.

Archived Link

இந்த சம்பவம் தொடர்பாக பல செய்திகள் மற்றும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் வெளியிட்ட ட்வீட் பதிவுகள் கிடைத்தன. 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சொத்து பிரச்னை தொடர்பாக குடும்பத்தினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை மாற்றி, வியாபாரம் செய்த தலித் பெண் தாக்கப்பட்டதாக தவறான தகவல் சேர்த்துப் பகிரப்பட்டு வருவது உறுதியாகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உத்தரப் பிரதேசத்தில் தலித் என்பதால் பெண் வியாபாரி தாக்கப்பட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False