
தமிழ்நாட்டின் ஆளுநராக ரவி நியமிக்கப்பட்ட சூழலில் ரவி சங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழக ஆளுநராக பொறுப்பேற்கும் மேதகு ரவி சங்கர் பிரசாத் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்” என்று இருந்தது. இந்த பதிவை Vijin A Vijoe என்பவர் 2021 செப்டம்பர் 10ம் தேதி பகிர்ந்திருந்தார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் ஜி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று ஒரு யூடியூப் வீடியோவும் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு ஆளுநராக முன்னாள் காவல் துறை அதிகாரி ரவி நியமிக்கப்பட்டு அவர் பதவியும் ஏற்றுவிட்டார். அதற்கு முன்பாக தமிழக ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டார் என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இவர் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது, இவர் நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன என்று தங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் முன்கூட்டியே ஊடகங்கள் செய்தி வெளியிடும். அவர் நியமிக்கப்படும் வரை, குடியரசு தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை குறிப்பிட்ட நபர் நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிட மாட்டார்கள்.
இதன் அடிப்படையில், கடந்த ஜூன் மாதத்தில் பல ஊடகங்களில் ரவி சங்கர் பிரசாத் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அசல் பதிவைக் காண: Facebook
ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், ரவி சங்கர் பிரசாத் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். எதன் அடிப்படையில் இப்படி ஒரு அறிவிப்பை இவர்களாக வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் தமிழ்நாடு ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட உள்ளார் என்று வதந்தி பரப்பினர். அது பொய்யானது என்று உறுதி செய்து நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அசல் பதிவைக் காண: presidentofindia.nic.in I Archive
தமிழ்நாடு ஆளுநராக ரவியைக் கடந்த செப்டம்பர் 9ம் தேதி நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கை வெளியிட்டிருந்தார். குடியரசுத் தலைவர் இணையதள பக்கத்தில் அந்த அறிவிக்கை உள்ளது. இதற்கு முன்பாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாடு ஆளுநர் நியமனம் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. ரவி சங்கர் பிரசாத் நியமிக்கப்படுவதற்கான பேச்சுக்கள் சென்றிருக்கலாம். ஆனால், அவர் நியமிக்கப்பட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
தமிழ்நாடு ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டார் என்று பகிரப்பட்ட தகவல்கள் உண்மையில்லை. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தமிழ்நாடு ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டதாக வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
