FACT CHECK: யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் தேநீர் கடை நடத்துகிறாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் தேநீர் கடை வைத்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்று தோற்றம் அளிக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உபி முதல்வரின் மூத்த சகோதரர் இன்னும் விளக்கமில்லாத தேநீர் கடையில் இருந்து குறைந்த வருமானத்தில் பிழைத்து வருகிறார். ❤️❤️❤️ ஆனால் தமிழகத்தில் உள்ள நிலைமை??” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவை Suthirmurugan Bjp என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 27ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடி போன்று தோற்றம் அளிக்கும் நபர் ஒருவரின் புகைப்படத்தை வைத்து பிரதமரின் சகோதரர் ஆட்டோ ஓட்டி மிக எளிமையாக வாழ்க்கையை நடத்துகிறார் என்று முன்பு வதந்தி பரவியது. அந்த நபர் நரேந்திர மோடியின் சகோதரர் இல்லை. மோடி போன்று உருவ ஒற்றுமை கொண்டவர் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

தற்போது, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் தேநீர்க்கடை வைத்துள்ளார் என்று ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளனர். இவர் பெயர் என்ன, எங்கு தேநீர்க்கடை வைத்துள்ளார் என எந்த ஒரு விவரத்தையும் வெளியிடவில்லை. படத்தில் உள்ள நபர் பார்க்க யோகி ஆத்தியநாத் போல உள்ளார். எனவே, யோகி ஆதித்யநாத் போன்று உருவ ஒற்றுமை உள்ள வேறு ஒரு நபரின் படத்தைப் பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வைத் தொடங்கினோம்.

இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நமக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. பல்வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடல்களில் இந்த படத்தைப் பதிவேற்றித் தேடிய போதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

யோகி ஆதித்யநாத் போன்று தோற்றம் கொண்ட நபர், தேநீர்க்கடை என பல்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போதும் இந்த புகைப்படம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் 2019ம் ஆண்டிலேயே தேநீர்க்கடை வைத்து வாழ்க்கை நடத்தும் யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் என்று வேறு சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆனபோது, அந்த தகவல் தவறானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தியில் வெளியான கட்டுரை கிடைத்தது. அதிலும், டீக்கடை வைத்து நடத்தும் நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற தகவல் இடம்பெறவில்லை. 

எனவே, யோகி ஆதித்யநாத்தின் குடும்பத்தினர் குறிப்பாக அவருடன் பிறந்த சகோதரர்கள் யார் யார், என்ன செய்கின்றனர் என்று கூகுளில் தேடி எடுத்தோம். அதில் யோகி ஆதித்யநாத் உடன் பிறந்தவர்கள் பற்றிய தகவல் கிடைத்தது. ஒரு அண்ணன், இரண்டு தம்பி மற்றும் சகோதரி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது சகோதரி அண்டை மாநிலமான உத்தர காண்டில் தேநீர்க்கடை வைத்திருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: theancestory.com I Archive

யோகி ஆதித்யநாத்தின் அண்ணன் விவசாயி என்றும், முதல் தம்பி இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும் இரண்டாவது தம்பி ஊடகத் துறையில் உள்ளதாகவும் செய்திகள் கிடைத்தன. அவர்களின் புகைப்படங்களும் கிடைத்தன. அவை எதுவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள நபருடன் ஒத்துப்போகவில்லை.

இதன் மூலம் யோகி தேநீர்க் கடை வைத்துள்ள யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் என்று பகிரப்படும் படம் அவருடைய சகோதரருடையது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் தேநீர்க்கடை வைத்துள்ளார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் தேநீர் கடை நடத்துகிறாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False