
‘’இந்திய பிரதமரின் முதலைக்கண்ணீர்,’’ என்று கூறி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பிரபலமான நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு பற்றி கண்ணீர் விட்ட நிகழ்வை கேலி செய்து, முதலைக் கண்ணீர் என்று கூறி செய்தி வெளியிட்டதாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பாக பேசுகையில், பிரதமர் மோடி சமீபத்தில் கண்ணீர் சிந்தியதாகக் கூறி ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனை மையமாக வைத்து, சமூக வலைதளங்களில் பலரும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதேபோல, நியூயார்க் டைம்ஸ் ஊடகமும் செய்தி வெளியிட்டதாகக் கூறியே மேற்கண்ட புகைப்பட பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
நாம், குறிப்பிட்ட நாளிதழ் புகைப்படத்தை பெரிதுபடுத்தி பார்த்தபோது, 21 May 2021, International Edition, The New York Times ஆகியவற்றை காண முடிந்தது. இது மட்டுமின்றி, முதலைக் கண்ணீர் புகைப்படத்தின் கீழே, சிரியா பற்றிய ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த தரவுகளை வைத்துக் கொண்டு, நியூயார்க் டைம்ஸ் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் சென்றோம். அங்கே, மே 21, 2021 அன்று வெளியிடப்பட்ட International Edition இ-பேப்பரை தேடி எடுத்தோம். அதனை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் ஒப்பீடு செய்தபோது, உண்மையான செய்தியை எடிட் செய்து, இவ்வாறு முதலை புகைப்படத்தை இணைத்து வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாக தெரியவந்தது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:முதலைக் கண்ணீர் விடும் மோடி என்று கூறி செய்தி வெளியிட்டதா நியூயார்க் டைம்ஸ்?
Fact Check By: Pankaj IyerResult: False
