
டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய பெண்கள் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
பெண்கள் மீது தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று ஏறி இறங்கும் நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்த டிராக்டரை வழி மரித்து திருப்பி அனுப்பிய போலீஸ்க்கு எதிராக வழிமறித்த பெண்கள் மீது ஈவு இரக்கம் இன்றி 5 பெண்கள் மீது டிராக்டர் ஏற்றிக் கொன்று குவித்த இட்லர் பி ஜே பி அரசு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை ஞாயிறு ஜெயபாலன் என்பவர் 2021 பிப்ரவரி 9 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு டிராக்டர் டேங்கரில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டதாகவும், அதை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும், இதை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது டிராக்டர் ஏற்றி போலீசார் கொன்றதாகவும் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் உண்மையா, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டார்களா என்று ஆய்வு செய்தோம்.
டெல்லி, ஐந்து பெண்கள் டிராக்டர் ஏற்றி கொலை என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இந்த சம்பவம் நடந்ததாக பல செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் கிடைத்தன.
அசல் பதிவைக் காண: jagran.com I Archive 1 I ndtv.com I Archive 2
அந்த செய்தியைப் பார்த்தோம். இந்தியில் வெளியான செய்தியில் பாதிக்கப்பட்ட பெண்களின் படம் இருந்தது. வீடியோவில் இந்த பெண்மணியைக் காணலாம். எனவே, அந்த செய்தியை மொழி மாற்றம் செய்து படித்துப் பார்த்தோம். அமிர்தசரசில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆங்கிலத்தில் வெளியான செய்திகளில், “2021 ஜனவரி 26ம் தேதி அமிர்தசரசில் விவசாயிகளுக்கு ஆதரவாக பெண்கள் போராட்டத்தில் பங்கேற்கச் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பெண்கள் மீது மோதியது. இதில் இரண்டு பெண்கள் பலியாகினர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த டிராக்டரின் பின்புறத்தில், யாஷ்பால் சைக்கிள் மற்றும் டிராக்டர் பார்ட்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ராம் தலாய் ரோடு, ஏ.எஸ்.ஆர் என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பெயரை வைத்து தேடினோம். அப்போது அமிர்தசரஸில் அந்த டிராக்டரில் குறிப்பிட்டுள்ள அதே முகவரியில் யாஷ்பால் நிறுவனம் செயல்பட்டு வருவது தெரிந்தது.
தொடர்ந்து தேடியபோது, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில் அமிர்தசரஸ் வல்லா போலீஸ் எஸ்.எச்.ஓ சஞ்சீவ் குமார் இது குறித்துக் கூறுகையில், “போராட்டத்தில் பங்கேற்க சென்ற ஐந்து பெண்கள் மீது டிராக்டர் மோதியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். கிராம மக்கள் டிராக்டர் டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: aninews.in I Archive
இதன் மூலம் அமிர்தசரசில் நடந்த விபத்து வீடியோ காட்சியை எடுத்து வந்து டெல்லியில் நடந்தது என்றும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதாகவும், அதை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ததாகவும் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
டிராக்டர் ஏறி பெண்கள் உயிரிழந்த சம்பவம் அமிர்தசரஸில் நடந்தது என்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:டெல்லியில் விவசாயிகளை ஆதரித்த ஐந்து பெண்கள் டிராக்டர் ஏற்றி கொலையா?- வதந்தியை நம்பாதீர்!
Fact Check By: Chendur PandianResult: False
