
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை அளிக்காதவர்களின் கடைகளை பா.ஜ.க-வினர் சூறையாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இனிப்பகங்களில் உள்ள லட்டுக்களை மட்டும் எடுத்து வீதியில் வீசி எறியும் ஒரு வீடியோ மேலே உள்ள பதிவில் பகிரப்பட்டுள்ளது. அதன் கீழ் தமிழில் “ராமர் கோவில் கட்டுவதற்கு டொனேஷன் தர மறுத்ததால், கடையை சூறையாடும் பாஜகவினர்..” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Tirupur Murasoli Palaniappan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 ஜூலை 3ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை தர மறுத்த கடையை பா.ஜ.க-வினர் சூறையாடியதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை. மேலும், இனிப்பகங்களில் லட்டுக்கள் மட்டுமே எடுத்து வீதியில் கொட்டப்பட்டது. மற்ற இனிப்புகளை தொடவில்லை. லட்டை மட்டும் எடுக்கும்படி கூற, கடைக்காரர்கள் எடுத்து கொடுக்கின்றனர். கடையை சூறையாடுபவர்கள் எதற்காக லட்டை மட்டும் வீணடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
எனவே, லட்டுக்களை தெருக்களில் கொட்டுதல் என்று கூகுளில் ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று பல வீடியோ மற்றும் செய்திகள் நமக்குக் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: jagran.com I Archive 1 I latestly.com I Archive 2
அயோத்தியில் உள்ள ஹனுமான் கர்ஹி என்ற ஆஞ்சநேயர் கோவிலில் 2021 ஜூன் 30ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த செய்தியை பார்த்தோம். அதில், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வேண்டுதலாக லட்டு வழங்குவது பக்தர்களின் வழக்கம். அந்த கோவில் உள்ள பகுதியில் லட்டு விற்பனை செய்யும் கடைகள் பல உள்ளன. ஆஞ்சநேயருக்குப் படைக்க வழங்கப்பட்ட லட்டுக்களின் தரம் சரியாக இல்லை. கெட்டுப்போனது போல இருந்ததால், லட்டு விற்கக் கூடாது என்று ஆஞ்சநேயர் கோவில் சாதுக்கள் கடைக்காரர்களிடம் கூறியுள்ளனர். அதன்போது, லட்டுக்களை கடைகளில் இருந்து கைப்பற்றி சாலைகளில் கொட்டி அழித்தும் உள்ளனர்.
சாதுக்களின் இந்த செயலுக்கு லட்டு வியாபாரிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாகக் குறிப்பிட்ட ஆஞ்சநேயர் கோவில் ஒன்றரை மணி நேரம் மூடப்பட்டது என்றும், சாதுக்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து அயோத்தியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்காத கடைகள் சூறையாடப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்காத கடைகளை பா.ஜ.க-வினர் சூறையாடினார்கள் என்று பரவும் வீடியோ தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ராமர் கோயில் கட்ட நன்கொடை வழங்காதவர்களின் கடைகளை பா.ஜ.க-வினர் சூறையாடினரா?
Fact Check By: Chendur PandianResult: False
