ராஜஸ்தான் போலீஸ்காரர் போலியான காயத்துக்கு கட்டுப் போட்டு வன்முறையைத் தூண்டினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

ராஜஸ்தானில் போலீஸ்காரர் ஒருவர் போலியாகக் காயம் ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தெளிவில்லாத வீடியோ பகிரப்பட்டுள்ளது. போலீஸ்காரர் ஒருவர் கைக்குட்டையை எடுத்து தலையில் கட்டிக்கொள்கிறார். சுற்றிலும் கலவர சூழல் காணப்படுகிறது. துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கிறது. நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் சங்கி போலீஸ்காரர் போலியாக காயப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிட்டு கேமராவில் சிக்கினார். சலசலப்பின் போது அவர் போலி இரத்தம் தோய்ந்த கட்டு அணிந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம், பின்னர் அவர் கும்பல் வன்முறையில் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ பதிவை Syed Basha என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 6ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

ஜோத்பூரில் 2022ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின் போது இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் கலவரமாக மாறியது. சமூக ஊடகங்கள் வழியாக வதந்திகள் பரவியதால் ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது. கலவரம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவர் இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அந்த போலீஸ்காரர் காயம் எதுவும் ஏற்படாமலேயே, காயம் பட்டது போல நடித்தாரா… உண்மை என்ன என்று ஆய்வு செய்தோம்.

ஜோத்பூர், கலவரம், காவல் துறை அதிகாரி காயம் என கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது கலவரத்தின் போது போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான செய்திகள் நமக்குக் கிடைத்தன. மேலும், ஜோத்பூர் காவல் துறை சார்பில் வெளியிட்டிருந்த ட்வீட்டும் நமக்கு கிடைத்தது.

Archive

அந்த காவல் துறை அதிகாரி தலையில் கைக்குட்டை வைத்துக் கட்டுவது, அது தொடர்பாக வெளியான செய்தி மற்றும் அவரது நெற்றிப் பகுதியில் காயம் இருக்கும் காட்சியை ஒன்றாக வைத்து பதிவிட்டிருந்தனர். இந்தியில் இருந்த அந்த ட்வீட்டை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், “ஏ.எஸ்.ஐ தனராம் காயம் அடைந்தது தொடர்பாக தவறான தகவல் பரவி வருகிறது. சம்பவத்தின் போது ஏ.எஸ்.ஐ தலையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது கை மற்றும் கைக்குட்டையில் ரத்தம் இருந்தது. சம்பவத்தைத் தொடர்ந்து ஏ.எஸ்.ஐ மருத்துவ சிகிச்சை பெற்றார். சர்தார்பூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தரப்பில் காயம் அடைந்த ஏ.எஸ்.ஐ தனராமை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. உண்மையில் என்னுடைய தலையில் காயம் ஏற்பட்டது. தலையில் மட்டுமல்ல கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கல் எறிந்ததால் என்னுடைய கை, காலிலும் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டதும் கைக்குட்டையைக் கொண்டு ரத்தத்தைத் துடைத்து சுத்தம் செய்தேன். அதன் பிறகுதான் அதே கைக்குட்டையைப் பயன்படுத்தி ரத்தப்போக்கை நிறுத்த கட்டினேன். வீடியோவை நன்கு கவனித்தால், கைக்குட்டையைக் கொண்டு தலையில் கட்ட செல்வதற்கு முன்பு என்னுடைய கையில் ரத்தம் வழிவதைக் காணலாம்” என்றார்.

ஜோத்பூர் காவல் துறை தன்னுடைய ட்விட்டர் பதிவில் பயன்படுத்தியிருந்த, தனராம் தலையில் ஏற்பட்ட காயத்தின் படத்தையும் அவர் நமக்கு அனுப்பினார். அதில், அவருடைய தலையில் காயம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். 

இதன் மூலம் ஜோத்பூர் கலவரத்தில் காவல் அதிகாரிக்கு காயம் ஏற்படவில்லை, கலவரத்தைத் தூண்டும் வகையில் போலியாக கட்டுப்போட்டுக்கொண்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராஜஸ்தானில் போலியாக தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு கலவரம் நடக்க காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராஜஸ்தான் போலீஸ்காரர் போலியான காயத்துக்கு கட்டுப் போட்டு வன்முறையைத் தூண்டினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False