
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் மட்டுமல்ல, சேட்டுக் கடைகளில் உள்ள நகைக் கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு போலியான நியூஸ் கார்டு வைரலாக பரவி வருகிறது.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
2021 பிப்ரவரி 8ம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் புகைப்படத்துடன் வெளியான புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் மட்டும் அல்ல முத்துட், மணப்புரம், சேட்டு கடைகளில் நீங்கள் வைத்து இருக்கும் நகைக் கடனையும் தள்ளுபடி செய்வோம் – திமுக தலைவர் ஸ்டாலின்” என்று உள்ளது.
இந்த பதிவை சக்தி வேல் என்பவர் 2021 பிப்ரவரி 11ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள ஐந்து சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கடந்த 2021 ஜனவரி மாதம் அவர் பேசியிருந்தார்.
இந்த நிலையில், தனியார் நகைக் கடன் நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைக் கடனையும் ரத்து செய்வதாக ஸ்டாலின் அறிவித்தது போல நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத் தனமான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது பார்க்கும் போதே தெரிகிறது. இது உண்மையானது என்று நினைத்தோ, வம்புக்காகவோ பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இது பற்றிய ஆய்வு செய்தோம்.

முதலில் 2021 பிப்ரவரி 8ம் தேதி புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டுகளை எல்லாம் ஆய்வு செய்தோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஸ்டாலின் படத்துடன் கூடிய இரண்டு நியூஸ் கார்டுகளை புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அதில், “பெங்களூருவில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார்; இனி நடக்க வேண்டியது நடக்கும் – திமுக தலைவர் ஸ்டாலின்” என்று இருந்தது. மற்றொன்றில், “200 இடங்களில் என்று ஏற்கெனவே சொன்னேன்; அது தவறு, 234 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் – திமுக தலைவர் ஸ்டாலின்” என்று இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Facebook 2 I Archive 2
இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜுக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
இதன் மூலம் தனியார் தங்க நகைக் கடன் நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முத்தூட், மணப்புரம் உள்ளிட்ட நிறுவனங்கள், மார்வாடி கடையில் வைக்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சேட்டுக் கடைகளில் வைத்துள்ள நகைக் கடன் தள்ளுபடி என்று ஸ்டாலின் கூறவில்லை!
Fact Check By: Chendur PandianResult: Altered
