தெலுங்கானாவில் இந்து மக்களின் வீட்டை தாக்க திரண்ட முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

தெலுங்கானாவில் இந்துக்களின் வீடுகளுக்குள் முஸ்லிம்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனி வழியாக உள்ளே நுழைய ஏராளமானவர்கள் முயற்சிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது நடப்பது பாகிஸ்தானில் இல்லை. தெலுங்கானாவில். இந்துக்களின் வீடுகளில் வலுக்கட்டாயமாக நுழைகின்றனர் போராளிகள். எந்த மீடியாவையும் உள்ளே நுழைய விடாமல் செய்து விட்டனர். இதுதான் இன்றைய நிலை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 ஆகஸ்ட் 30ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும்; இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தெலுங்கானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜா சிங் இஸ்லாமியர்களின் இறைதூதர் பற்றி தவறாக பேசியதால் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பா.ஜ.க அறிவித்தது. இருப்பினும் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தெலங்கானாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வீடியோவில் பாகிஸ்தானில் இல்லை, தெலுங்கானாவில் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்துக்களின் வீட்டுக்குள் நுழையும் போராளிகள் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், மறைமுகமாக இஸ்லாமியர்கள் நுழைந்தார்கள் என்று குறிப்பிடுகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்று செய்திகளில் பார்த்த நினைவு என்பதால் இது பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத்தில் இந்து ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலை அவமதித்தார் என்று வதந்தி பரவியதாகவும் அதனால் அந்த இந்து நபரை தாக்க ஏராளமான இஸ்லாமியர்கள் குவிந்தனர் எனவும் செய்தி கிடைத்தது. நல்ல வேளையாக அந்த இந்து குடும்பம் தப்பியது என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும், இந்த குற்றச்சாட்டு அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் செய்திகள் கிடைத்தன.

பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத் நகரில் இந்த சம்பவம் நடந்தது என்று பல வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. அந்த வீடியோக்களில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள குடியிருப்பைக் காண முடிகிறது. மேலும், அதன் மீது ஏறித் தாக்க முயற்சிக்கும் காட்சிகளையும் காண முடிந்தது. 

உண்மைப் பதிவைக் காண: dawn.com I Archive 1 I freepressjournal.in I Archive 2

பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். பாகிஸ்தான் ஊடகங்களில் இது தொடர்பாக செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது.

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தெலுங்கானாவில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. ஐதராபாத் என்ற பெயரை கேட்டதும், இந்தியா என்று தவறாகப் புரிந்துகொண்டு வதந்தியைப் பரப்பியிருக்கலாம். இந்த வீடியோ இந்தியாவைச் சார்ந்தது இல்லை, பாகிஸ்தானைச் சேர்ந்தது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Archive

முடிவு:

தெலுங்கானாவில் இந்துக்கள் வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யும் இஸ்லாமியர்கள் என்று பகிரப்படும் வீடியோ பாகிஸ்தானைச் சார்ந்தது என்பதை தகுந்த அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தெலுங்கானாவில் இந்து மக்களின் வீட்டை தாக்க திரண்ட முஸ்லிம்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False