
‘’பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக, ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக மீது பெரும் சர்ச்சை நிலவுகிறது. அக்கட்சி பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதாகக் கூறி சமூக வலைதளங்ளில், தேர்தல் பிரசார கூட்டங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் அதிமுக பிரமுகர் அருளானந்தம் என்பவருக்கு தொடர்பு உள்ளதாகப் புகார் எழுந்ததன் பேரில், அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, அதிமுக அறிவித்தது.

இந்நிலையில், அருளானந்தம் பற்றி தினசரி புதுப்புது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. அதில் ஒன்றுதான் மேற்கண்ட தகவலும்.
உண்மையில், அதிமுக பிரகமுகரான அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தாரா என்ற சந்தேகம் எழவே, இந்த புகைப்படம் உண்மையா என ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை , பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து, அருளானந்தம் பெயரில் பரப்புகின்றனர் என்று தெரியவந்தது.

நவம்பர் 02, 2019 அன்று தனது மகள் திருமணத்தில் கலந்துகொள்ளும்படி மு.க.ஸ்டாலினை, எச். ராஜா நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அப்போது எடுத்த புகைப்படம்தான் மேலே எடிட் செய்யப்பட்டு, அருளானந்தம் பெயரில் பகிரப்படுகிறது.

அருளானந்தம், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தையும், மேலே உள்ள எச்.ராஜா புகைப்படத்தையும் சேர்த்து எடிட் செய்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான நபர் மு.க.ஸ்டாலினை சந்தித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered
