FACT CHECK: ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று நடிகர் கார்த்தி கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

எத்தனை தடைகள் வந்தாலும் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட நடிகர்  கார்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ உண்மை கண்டறிய உதவு வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார்.

அதை திறந்து பார்த்த போது, நடிகர் கார்த்தி புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு இருந்தது. அதில், “ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து என் அண்ணன் சூர்யா திரைத்துறையை விட்டு விலகுவது அவருக்கு தான் நஷ்டத்தை ஏற்படுத்தும். எத்தனை தடைகள் வந்தாலும் மத்திய அரசு இந்த மசோதாவை அமல்படுத்தியே தீர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Venkatpavana என்பவர் ஜூலை 3, 2021 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய அரசு ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளது. இது தொடர்பாக பொது மக்கள் தங்கள் கருத்தை அரசுக்கு தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது. இந்த சூழலில் இந்த திருத்த மசோதாவுக்கு நடிகர் சூர்யா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சூர்யாவின் எதிர்ப்பு பற்றி வெளியான ஊடகங்களின் நியூஸ் கார்டுகளை திருத்தம் செய்து, அவர் சினிமாவை விட்டே விலக்போகிறேன் என்று அறிவித்ததாக கூறி சிலர் வதந்தி பரப்பினர். 

நடிகர் சூர்யா மட்டுமின்றி இயக்குநர்கள் தங்கர்பச்சான், சீனு ராமசாமி உள்ளிட்டோர் திரை உலகை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்தார்கள் என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த சட்டத்தை வரவேற்று ட்வீட் செய்தார் என்றும் விஷமத்தனமாக போட்டோஷாப் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகளை பகிர்ந்து வந்தனர். 

இந்த நிலையில், தன்னுடைய சகோதரர் சூர்யாவுக்கு எதிராகவே நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்தது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சூர்யா திரை உலகை விட்டு வெளியேறினாலும் இந்த மசோதாவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அவர் கூறியதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று அறிய, நியூஸ் 7 தமிழ் ஜூலை 3, 2021 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். 

அப்போது நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட கார்த்தியின் அசல் நியூஸ் கார்டு நமக்கு கிடைத்தது. நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டில், “எந்த நேரத்திலும் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வழிவகுக்கும் மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 வரைவு திரைப்பட தயாரிப்பிற்குப் பாதுகாப்பின்மையும் வணிக வாய்ப்புகளையும் கடுமையாக பாதிக்கும். எனவே இதுபோன்ற நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்” என்று நடிகர் கார்த்தி ட்வீட் செய்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நடிகர் கார்த்தி வெளியிட்ட ட்வீட் பதிவையும் தேடி எடுத்தோம். அதில் ஆங்கிலத்தில் ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்ற வகையில் அவர் பதிவிட்டிருப்பது தெரியவந்தது.

Archive

இதன் அடிப்படையில், நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து, விஷமத்தனமான கருத்தை சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து சிலர் மகிழ்ந்து வந்திருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நடிகர் கார்த்தி கூறியதாக பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.

முடிவு:

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நடிகர் கார்த்தி கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று நடிகர் கார்த்தி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False