ராதாரவி ஒரு நாலாந்தரப் பேச்சாளர் என்று அண்ணாமலை கூறினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

நடிகர் ராதா ரவியை நாலாந்தரப் பேச்சாளர் என்று அண்ணாமலை விமர்சித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அண்ணாமலை புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராதா ரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் குடித்துவிட்டுப் பேசுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை அக்யூஸ்டுகள் என்று குறிப்பிட்டது தவறுதான் – பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விளக்கம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Stalin Venkatesh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 5ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ராதா ரவி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அக்யூஸ்டுகள் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராதா ரவி பேச்சை பொருட்படுத்தத் தேவையில்லை என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டின் டிசைன், தமிழ் ஃபாண்ட் வழக்கமாக ஜூனியர் விகடன் பயன்படுத்தும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இது போலியானது என்பது தெரிந்தது. இதை உறுதி செய்ய ஆய்வு நடத்தினோம்.

முதலில் ஜூனியர் விகடன் 2022 ஜூலை 5ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இது குறித்து ஜூனியர் விகடன் சமூக ஊடகம் – டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இதை நீங்கள் வெளியிட்டீர்களா என்று கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

ராதா ரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் குடித்துவிட்டுப் பேசுவதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா என்று தேடிப் பார்த்தோம். அவருடைய சமூக ஊடக பக்கங்கள் எதிலும் அப்படிக் கூறவில்லை. மேலும், எந்த ஒரு செய்தியும் வெளியாகவும் இல்லை. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரதமர் மோடியை அக்கியூஸ்ட் என புகழ்ந்த ராதா ரவியை நாலாந்தர பேச்சாளர் குடித்துவிட்டு உளறுகிறார் என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராதாரவி ஒரு நாலாந்தரப் பேச்சாளர் என்று அண்ணாமலை கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False