
‘’நேபாளம், இலங்கையை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்,’’ என்று சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட ட்வீட்டை மேற்கோள் காட்டி பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த ஃபேஸ்புக் பதிவில், சன் நியூஸ் வெளியிட்ட டெம்ப்ளேட் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53, ராவணன் ஆண்ட இலங்கையில் ரூ.51,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பலரும் மேற்கோள் காட்டி ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருவதால், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர்கள் கேட்டுக் கொண்டனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வு பற்றி பாஜக.,வைச் சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி, பிப்ரவரி 2, 2021 அன்று ட்வீட் ஒன்றை வெளியிட்டது, இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான செய்தி பல்வேறு ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.
ஆனால், சுப்ரமணியன் சுவாமியின் இந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ள தகவல் உண்மையா என்று பார்த்தால், நம்பகமானது இல்லை என்பதுதான் உண்மை.
ஆம். பொதுவாக, ஒவ்வொரு நாட்டிற்கும் அவர்களின் உள்நாட்டு பணவீக்கத்திற்கு ஏற்ப விலைவாசி மாறுபடக்கூடும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு குறைவாக தெரிந்தாலும், அந்நாட்டில் வசிப்பவர்களுக்கு அது சுமையாகவே இருக்கும்.
முதலில், பிப்ரவரி 2, 2021 அன்றைய நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல் விலை எவ்வளவு என்று பார்க்கலாம்.
அன்றைய நிலவரப்படி தலைநகர் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.30 ஆக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93 என்று சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். அவர் ட்வீட் வெளியிட்ட நேரத்தில் அந்த அளவுக்கு பெட்ரோல் விற்கப்படவில்லை. ஆனால், தற்போது படிப்படியாக ரூ.93 வரை இந்திய அளவில் பெட்ரோல் விலை எட்டிவிட்டது.
India Today Link I BankBazaar.com Link
இதற்கடுத்தப்படியாக, நேபாளத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு எவ்வளவு என்று பார்க்கலாம்.
நேபாள் ஆயில் கார்ப்பரேஷன் (NOC) அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், பெட்ரோல், டீசல் லிட்டர் விலை நேபாள் ரூபாய் மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்திய பகுதியான ராக்சலில் லிட்டர் பெட்ரோல் விலை நேபாள ரூபாய் மதிப்பில் NRs. 140.76 ஆக உள்ளதாகக் கூறியுள்ளனர். அதனை இந்திய ரூபாய் மதிப்பிற்கு கணக்கீடு செய்தால், ரூ.88.15 வருகிறது.
இதுவே, நேபாளத்தில் உள்ள பிரிகுஞ்ச் நகரில் லிட்டர் பெட்ரோல் விலை, அந்நாட்டு ரூபாய் மதிப்பில் NRs.108.50 ஆக உள்ளது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.67.95 ஆகும்.
எப்படி பார்த்தாலும், சுப்ரமணியன் சுவாமி கூறும் கணக்கீட்டிற்கும், இதற்கும் தொடர்பே இல்லை என்று தெரியவருகிறது. இந்திய மதிப்பில் கணக்கிட்டால், தோராயமாக, நேபாளத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சுப்ரமணியன் சுவாமி, நேபாளத்தில் ரூ.53க்கு பெட்ரோல் கிடைப்பதாகக் கூறியுள்ளார். எனவே, இது தவறான தகவல்.
அடுத்தப்படியாக, இலங்கை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு, கடந்த 2019 முதலாக, அந்நாட்டு மதிப்பில் 137க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே இந்திய மதிப்பில் ரூ.51ஆக உள்ளது. இதனை சுப்ரமணியன் சுவாமி ரூ.51 என்று குறிப்பிட்டுள்ளார். இது சரியானதாக உள்ளது.

Ceylon Petroleum Corporation Link
எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால், இலங்கை, நேபாளத்தில் நீண்ட இடைவெளி விட்டே, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்கின்றனர்.
அத்துடன், சுப்ரமணியன் சுவாமி கூறுவது போல, நேபாளம், இலங்கையில் பெட்ரோல் விலை விற்பனை செய்யப்படுவது இந்திய ரூபாயில் அல்ல. அந்நாட்டு ரூபாய் மதிப்புகளில்தான்.
அதனை இந்திய ரூபாய்க்கு மாற்றி கணக்கீடு செய்து பார்த்தாலும், நேபாளத்தில் லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக ரூ.67 ஆகவும், இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக ரூ.51 ஆகவும் உள்ளது. ஆனால், சுப்ரமணியன் சுவாமி நேபாளத்தில் ரூ.53க்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறுவது தவறு. இலங்கையில் அவர் கூறுவதுபோல, ரூ.51க்கே ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. இந்தியாவிலும் ரூ.93க்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, உலகம் முழுக்க பெட்ரோல் விலை எப்படி உள்ளதென்று, விரிவான விலைப் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட்டை அப்படியே ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. ஆனால், அதனை உண்மை என மேற்கோள் காட்டி ஃபேஸ்புக் பயனாளர்களும் தகவல் பகிர்வது மற்றவர்களுக்கு குழப்பம் விளைவிக்கும் செயலாக உள்ளதை, இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ராமரின் இந்தியாவில் அதிகம்… சீதையின் நேபாளம், ராவணனின் இலங்கையில் குறைவு… சுப்ரமணியன் சுவாமியின் தவறான ஒப்பீடு!
Fact Check By: Pankaj IyerResult: Explainer
