
பிரதமர் மோடி மேசையில் குவிக்கப்பட்ட உணவு வகைகளை ருசி பார்ப்பது போன்ற படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனுடன் 432 வகை உணவுகளை சாப்பிடும் ஏழைத்தாயின் மகன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய முடிவு செய்தோம்.
வதந்தியின் விவரம்:
அம்மாவும், மகனும் பேசிக் கொண்டது.
அம்மா ; டேய் மகனே நீ பலைய கஞ்சியும் மிலகாயும் சாப்ட தால ஏழை தாயின் மகனாக ஆகிவிட முடியாது. நம்ம நாட்டு மக்கலோட காசுல 432 வகையான உணவை சாப்புடுறான் பாரு மோடி அவன் தான் ஏழை தாயின் மகன்,,, சரியா.
மகன் :???????????

https://www.facebook.com/groups/sunnewstamil/permalink/1870004236437577/
பிரதமர் மோடி உணவு மேசையில் அடுக்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவது போலவும், இந்த படத்துக்குக் கீழ் ஏழைகள் உணவு இன்றி பட்டினி கிடப்பது போன்ற படங்களை இணைத்து கொலாஜ் செய்து வெளியிட்டுள்ளனர். மேலும், கஞ்சியும் மிளகாயும் சாப்பிட்டால் ஏழைத்தாயின் மகன் ஆகிவிட முடியாது, 432 வகை உணவுகளை சாப்பிட்டால்தான் ஏழைத்தாயின் மகனாக இருக்க முடியும் என்றும் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவானது கடந்த ஏப்ரல் 8, 2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் மோடி மேசையில் இவ்வளவு உணவுகளா என்று நினைத்து பலரும் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
மோடியின் மேசையில் ஏராளமான விதவிதமான உணவுகள் நிறையத் தட்டு, கிண்ணங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதை மோடி ருசி பார்க்கிறார். இதைப் பார்க்கும்போது, பிரதமர் மோடியின் ஒரு வேளைக்கு இவ்வளவு உணவு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. படத்தின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய கூகுள் இமேஜ் ரிவர்ஸ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் பொய்யானது என்று பல செய்திகள் கிடைத்தன.


உணவு வகைகளால் மேசை நிரப்பப்பட்ட, பிரதமர் மோடி உணவு உட்கொள்ளும் படத்தை மும்பையைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி சஞ்சய் நிருபம் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ளார்.
न खाऊँगा ना खाने दूँगा ! pic.twitter.com/6n1voKhobr
— Sanjay Nirupam (@sanjaynirupam) September 6, 2018
இந்த படம் போலியானது என்று அப்போதே பலரும் உண்மை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். நம்முடைய factcrescendo.com கூட உண்மை கண்டறியும் ஆய்வை மேற்கொண்டு ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனாலும் கூட சஞ்சய் நிருபம் அந்த பதிவை அகற்றவில்லை. அந்த பதிவைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
மோடியின் உணவு படத்தை yandex.comல் பதிவேற்றி தேடினோம். மோடியின் மேசையில் உள்ள உணவு வரிசைகளின் உண்மையான படமும், குஜராத் முதல்வராக இருந்தபோது எடுக்கப்பட்ட மோடி உணவு அருந்துவது போன்ற படமும் கிடைத்தன. இந்த இரண்டு படங்களையும் இணைந்து புதிதாகப் போலி படம் தயாரிக்கப்பட்டது தெரிந்தது.

குஜராத் முதல்வராக இருக்கும்போது 2008ம் ஆண்டு எடுத்த படம் கீழே…

வி ஆர் லெபனான் என்ற வாக்கியத்துடன் கிடைத்த படம். அதில், லெபனான் என்ற வரி நீக்கப்பட்டுள்ளது… ஆதாரப்படம் கீழே:

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி படம்… இதில், லெபனான் படத்தில் உள்ள உணவு வகைகள் அப்படியே இருக்கும். மேலும், மோடியின் இடது கைக்கு கீழே மூட்டை போன்ற உருவம் தெளிவாகத் தெரியும்.

இதன் மூலம், இரண்டு படங்களை சேர்த்து மோடி உணவு மேசையில் விதவிதமான உணவுகள் வைக்கப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்றுள்ளனர்.
பிரதமர் மோடியின் உணவு பழக்க வழக்கம் பற்றி செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று இணையத்தில் தேடினோம். அப்போது. 2018 பிப்ரவரியில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், பிரதமர் மோடி பெரிய அளவில் உணவுகள் மீது அக்கறை செலுத்தியது இல்லை. எளிய சைவ உணவுகளே பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பன செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதே நேரத்தில், மோடியின் உணவு பற்றி காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒருவர் பகீர் குற்றச்சாட்டை எழுப்பினார். மோடியின் தினசரி உணவு காளான்தான் என்றும், ஒரு காளானின் விலையே ரூ.80 ஆயிரம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த தகவல் நிரூபிக்கப்படவில்லை. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், மோடி பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தவறான பதிவு பகிரப்பட்டுள்ளது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
