
பிரதமர் மோடியின் ஆட்சியில், ஆபத்துக் காலத்தில் செல்லும் மனிதர்கள் என்று மூட்டை முடிச்சுகளோடு குடும்பம் குடும்பமாக மக்கள் செல்லும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தலையில் மிகப்பெரிய சுமையுடன், கையில் குழந்தைகளுடன் பலரும் கால்நடையாக வரும் புகைப்படம் மற்றும் பிரதமர் மோடி மயிலுக்கு உணவு அளிக்கும் புகைப்படம் ஒன்று சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆபத்து காலத்தில் மனிதர்களிடத்தில் காட்டாத உங்களின் கருணையை மயிலிடம் காட்டி என்ன பயன் பிரதமரே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Albert Sam என்பவர் 2020 ஆகஸ்ட் 23ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி தினசரி உடற்பயிற்சி செய்யும் போதும் தன்னுடைய டெல்லி இல்லத்தில் இருக்கும்போதும் மயில்களுக்கு உணவு அளிப்பது தொடர்பான புகைப்பட வீடியோ பதிவை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் இந்த பப்ளிசிட்டி விளம்பரம் தேவையா என்று பலரும் அவரை விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், “ஆபத்து காலத்தில் மனிதர்களிடத்தில் காட்டாத உங்களின் கருணையை மயிலிடம் காட்டி என்ன பயன் பிரதமரே” என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் இப்போது கொரோனா காலத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
குறிப்பிட்ட படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. இன்னும் சொல்லப் போனால் பிரதமராக 2014ம் ஆண்டில் மோடி பதவி ஏற்பதற்கு முன்பிருந்தே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில், செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளதைக் காண முடிந்தது.
சிஏஏ சட்டத்துக்குப் பிறகு வங்க தேசம் திரும்பும் மக்கள், வெள்ள பாதிப்பு, வங்கதேச ஊடுருவல் என்று பல செய்திகளில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. எனவே, அசல் படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம்.
நீண்ட தேடலுக்குப் பிறகு, reuters.com இணையதள பக்கத்தில் இந்த புகைப்படம் அஸ்ஸாம் மாநிலத்தில் 2012ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. அஸ்ஸாம் மாநிலம் சிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாமுக்குச் சென்றபோது எடுத்த படம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
பிரதமர் மோடி 2012ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தார். 2001 அக்டோபர் முதல் 2014 மே மாதம் வரை அவர் குஜராத் முதல்வராக இருந்தார். 2014 மே மாதம் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அஸ்ஸாமில் நடந்த நிகழ்வுக்கு அஸ்ஸாம் மாநில முதல்வர்தான் பொறுப்பாக முடியும். குஜராத் மாநில முதல்வரான நரேந்திர மோடி அதற்கு பொறுப்பேற்க முடியாது.
இதன் மூலம், 2012ம் ஆண்டு அஸ்ஸாமில் எடுக்கப்பட்ட படத்தை, தற்போது நிகழ்ந்தது போன்று தவறான தகவல் சேர்த்து, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்திருப்பதாக, தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மூட்டை முடிச்சுகளுடன் மக்கள்; மோடி ஆட்சிக் காலத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
