FACT CHECK: முக்குலத்தோர் தயவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், "முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது போல உள்ளது.
இந்த பதிவை தஞ்சை வடசேரி சிவா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 பிப்ரவரி 27ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் குறிப்பிட்ட சமூகத்தினர் வாக்கு வேண்டாம் என்று வெளிப்படையாக கூற மாட்டார்கள். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம். இது நியூஸ் 18 வெளியிட்ட நியூஸ் கார்டு இல்லை. செய்தி ஒளிபரப்பின் போது ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போல உள்ளது. எனவே, இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு டிஜிட்டல் நிர்வாகி யுவராஜைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர் இது போலியானது. இப்படி ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை என்றார்.
அதிமுக-வின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் இது போலியானது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
மேலும், அ.தி.மு.க எம்.பி கே.பி.முனுசாமி கூறியதாக பரவிய நியூஸ் கார்டு போலியானது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்தந நியூஸ் கார்டு போலியானது என்று ஏற்கனவே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன் மூலம் முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களுடன் மேற்கண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:முக்குலத்தோர் தயவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False