
ஸ்டாலின் ஆட்சியில் சென்னையில் பரிசல் மூலம் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்றும், நீச்சல் குளம் போல சென்னை மாறிவிட்டது என்றும் சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட சூழலில், மு.க.ஸ்டாலின் ஆட்சி நிர்வாகம் காரணமாக சென்னையில் மழை நீர் தேங்கிவிட்டது என்று குற்றம்சாட்டும் வகையில் சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பரிசல் மூலம் மக்கள் காப்பாற்றப்படும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியல் ஆட்சியில் ஒகேனக்கல் பரிசல்
இதோ நம் சிங்கார சென்னையில்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை கோபாலபுரம் கொத்தடிமை என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 நவம்பர் 7ம் தேதி பதிவிட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: Facebook
இதே போன்று தங்கத்தமிழன் பத்மதாசன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் தேங்கி நிற்கும் மழை நீரில் நின்றபடி குடிதண்ணீர் பிடிக்க மக்கள் வரிசையில் நிற்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். நிலைத் தகவலில், “#விடியல்_ஆட்சியில் ஒரே நாள் மழையில் நீச்சல்குளம் ஆன சென்னை..” என்று குறிப்பிட்டுள்ளார். இவற்றைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. 2015ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் ஒரே நாளில் அதிகபட்ச மழை இப்போதுதான் பதிவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் மிகக் கன அளவு மழைப்பொழிவு ஏற்பட்டதால் சென்னையில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த சூழலில் மழை வெள்ளத்துக்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: gettyimages.in I Archive 1 I bbc.com I Archive 2
பரிசலில் மக்கள் பயணிக்கும் படம் தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் 2015ம் ஆண்டு வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. பிபிசி உள்ளிட்ட பல ஊடகங்கள் இந்த புகைப்படத்தை 2015ம் ஆண்டு பயன்படுத்தியிருந்தன.
ஏ.எஃப்.பி இந்த புகைப்படத்தை எடுத்திருந்ததாக பிபிசி வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் 2021 நவம்பரில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.
அடுத்ததாக மழை நீரில் நின்று குடி தண்ணீர் பிடிக்கும் மக்கள் படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் சென்னையில் எடுக்கப்பட்டது இல்லை, அகமதாபாத் நகரில் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
2017ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த புகைப்படத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பல ஊடகங்களும் தங்கள் செய்தியில் வெளியிட்டிருந்தது தெரியவந்தது. இந்த புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive 1 I hindustantimes.com I Archive 2
இதன் மூலம் ஸ்டாலின் ஆட்சியில் சென்னை மழை வெள்ள காட்சி என்று பகிரப்படும் இந்த புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டது இல்லை என்பதும், ஒரு புகைப்படம் அகமதாபாத் நகரில் எடுக்கப்பட்டது என்றும் உறுதியாகிறது.
முடிவு:
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மழை வெள்ள காட்சி என்று பகிரப்படும் படங்கள் இப்போது எடுக்கப்பட்டவை இல்லை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஸ்டாலின் ஆட்சியில் மழை வெள்ளம் என்று பகிரப்படும் பழைய படங்கள்!
Fact Check By: Chendur PandianResult: False
