
எடப்பாடி பழனிசாமியை சிறையில் அடையுங்கள் என்று செங்கோட்டையனுக்கு ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்திருந்த வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளாரே என்று நிருபர் கேட்க, அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், “தூக்கிப்போடுங்களேன் நாங்களா வேண்டாங்கிறோம்” என்கிறார்.
நிலைத் தகவலில், “கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி A1 குற்றவாளி என்றால் பிடித்து உள்ளே போடுங்கள் செங்கோட்டையன் பேச்சுக்கு ஆதரவளித்த திண்டுக்கல் சீனிவாசன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அ.தி.மு.க-வில் இருந்து சமீபத்தில் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இது தொடர்பாக செங்கோட்டையன் அளித்த பேட்டியில், “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிதான் ஏ1 குற்றவாளி” என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமியை சிறையில் அடைக்க வேண்டும் என்பது போல முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது போன்று வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோ முழுமையானதாக இல்லை. செங்கோட்டையன் மற்றும் தி.மு.க அரசை விமர்சித்து, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான குரலில் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்திருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், அதை எடிட் செய்து, செங்கோட்டையனுக்கு ஆதரவு அளிப்பது போன்று மாற்றிப் பதிவிட்டுள்ளனர். திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டியை பார்க்காதவர்கள் இந்த பதிவை பார்த்தால் அது உண்மை என்றே கருதுவார்கள். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
திண்டுக்கல் சீனிவான் அளித்த பேட்டி ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்டிருந்தன. NewsTamil 24X7 யூடியூப் பக்கத்தில் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டியை பார்த்தோம். நிருபரின் கேள்விக்கு, ” ன் புடிச்சு உள்ள போடுங்களே நாங்களா வேணாங்கிறோம். சட்டப்படி போடுங்க தம்பி. சட்டம் இருந்து, அவரு ஏ1-னா இருந்து, அக்யூஸ்டாக இருக்கிறார் என்றால், போலீஸ் என்ன செய்கிறார்கள். இல்லைன்னா தி.மு.க ஆட்சிதான் என்ன செய்யுது. நாலரை வருஷம் ஆகி போச்சே. ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடி இருந்தது தானே கொடநாடு வழக்கு. உண்மையிலேயே திராணி இருந்து, தைரியம் இருந்து, சரியான சட்டம் இருந்தால் பிடிச்சி ஏன் ஜெயில்ல போடமா வச்சிருக்காங்க. இவருக்கு (செங்கோட்டையன்) ஆதாரம் இருந்தா கொடுக்க வேண்டியதுதானே” என்று கூறுகிறார். இந்த பேட்டியில் முழுக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், செங்கோட்டையனுக்கு எதிராகவுமே அவர் பேசியிருந்தார்.
இந்த பேட்டி வீடியோவை எடிட் செய்து, சாதகமான பகுதியை மட்டும் எடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் ஒன்று கூடியது போன்ற தவறான புரிதல் ஏற்படும் வகையில் பதிவை உருவாக்கியிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆதாரம் இருந்தால் கொடுக்கலாமா என்று செங்கோட்டையனை விமர்சித்து திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டியை எடிட் செய்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாக வீடியோ எடிட் செய்து வெளியிடப்பட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Altered


