
‘’ஏமனில் 8 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்து கொன்ற 40 வயது பொறுக்கி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
உங்கள் தோழன்பிரசாத் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இருவேறு புகைப்படங்களை பகிர்ந்து, ‘’என்ன கொடுமைடா!!! 40 வயதுள்ள இந்த பொறுக்கி நாய் 8 வயது பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்டது. முதலிரவு முடிந்த பிறகு அந்த பேத்தி வயதுடைய பெண் குழந்தை அநியாயமாக இறந்து விட்டது,’’ என்று எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இதன்படி, இவர்கள் குறிப்பிடுவது போல, ஏமனில் ஏதேனும் இப்படி சம்பவம் நடைபெற்றதா என தகவல் ஆதாரம் தேடினோம். அப்போது, நிறைய செய்தி இணைப்புகள் கிடைத்தன. அதில், சிலவற்றில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இருப்பதுபோல புகைப்படம் எதுவும் இல்லை. சிலவற்றில் மேற்கண்ட புகைப்படத்தில் ஒன்று மட்டும் இடம்பெற்றுள்ளது.
இதே செய்தி மேற்கண்ட புகைப்படம் இல்லாமல் ராய்ட்டர்ஸ் செய்தித் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். எனவே, இது உண்மைதானா என்ற சந்தேகம் மேலும் வலுத்தது.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படங்களில் முதலாவது புகைப்படம் உண்மையானது இல்லை என தெரியவருகிறது. அதனை யாரோ மேற்கோள் காட்டுவதற்காக பயன்படுத்த, மற்றவர்கள் அப்படியே உண்மை என பகிர்ந்துவிட்டனர் என்று புரிகிறது.
இதையடுத்து, மற்றொரு புகைப்படம் உண்மையா என Yandex இணையதளத்தில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.
இதன்படி, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படங்களில் 2வது புகைப்படம் பற்றி பல்வேறு வதந்திகள் பரவுவதாகவும், அது தவறானவை எனவும் தெரியவந்துள்ளது. இதுபற்றி ஏற்கனவே இணையதளம் ஒன்று உண்மை கண்டறியும் சோதனை செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
துருக்கி நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து விஷமத்தனமாக தகவல் பரப்பியுள்ளனர் என தெரிகிறது.
இதையடுத்து, ஏமன் நாட்டில் உண்மையில் 8 வயது சிறுமி யாரேனும் இப்படி பாதிக்கப்பட்டாரா என தகவல் தேடினோம். அப்போது, இந்த வதந்தி 2013ம் ஆண்டில் பரவிய ஒன்று எனவும், இதனை சம்பந்தப்பட்ட சிறுமி, அவரது தந்தை நேரடியாக மறுத்துவிட்டர் எனவும் தெரியவந்தது.
அதாவது, ஏமனில் இருந்து இத்தகைய வதந்தி பரவியதை அடுத்து, Gulf News இதுபற்றி ஆய்வு செய்து உண்மையை வெளியிட்டுள்ளது. அத்துடன், வெவ்வேறு பெயர்களில் இந்த வதந்தியை பலரும் பரப்பியுள்ளதும் தெரியவருகிறது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 2013ம் ஆண்டு இத்தகைய வதந்தி பரவியதை அடுத்து, சம்பந்தப்பட்ட சிறுமி அவரது தந்தையே இதுபற்றி மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு புகைப்படங்களையும் முரண்பாடாக இணைத்து இந்த வதந்தியை பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருவதும் சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஏமனில் 40 வயது ஆண் 8 வயது சிறுமியை திருமணம் செய்து கொன்றார்: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை
Fact Check By: Pankaj IyerResult: False
