
ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டு, சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக, சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மரத்தில் ஒருவர் கட்டப்பட்டுள்ளார். அவருக்கு மது பாட்டிலில் எதையோ குடிக்க கொடுக்கின்றனர். நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் தலித் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. சிலர் சாதிக் கும்பலில் ஒரு தலித்தை சித்திரவதை செய்கிறார்கள் கயிற்றால் கட்டப்பட்டு பகிரங்கமாக சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்துகிறாரகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ப.இரா. மணி முத்து என்பவர் 2020 ஜூலை 31ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வட இந்தியாவில் யாராவது தாக்கப்பட்டாலே அது தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்த வன்முறை என்று சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகிறது. இது தொடர்பாக, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ்ப் பிரிவில் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம்.
தற்போது ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் தாக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளதால், இது உண்மையா என ஆய்வு மேற்கொண்டோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அதனுடன் ராஜஸ்தான், தலித் இளைஞர் மீது தாக்குதல், சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தினர் போன்ற கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம்.
அப்போது இதுபற்றி சில செய்திகளும், ஊடகங்கள் மேற்கொண்ட உண்மை கண்டறியும் ஆய்வுகளும் கிடைத்தன. இந்துஸ்தான் டைம்ஸ் கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிட்டிருந்த செய்தியில், “ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் கள்ளக் காதல் விவகாரம் காரணமாக மரத்தில் கட்டிவைத்து சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய சம்பவம் நடந்தது என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த செய்தியை தொடர்ந்து படித்த போது, இந்த சம்பவம் கடந்த ஜூலை 25ம் தேதி நடந்தது. இந்த வீடியோ 28ம் தேதி வைரல் ஆனது. இது தொடர்பாக புகார் வரவில்லை என்றாலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட நபர், தாக்கியவர்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். கள்ளக் காதல் விவகாரம் தொடர்பாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனால் தாக்குதலுக்கு ஆளான நபர் புகார் அளிக்க முன்வர மறுக்கிறார்” என போலீசார் குறிப்பிட்டதாக இருந்தது.

இது தொடர்பாக கடந்த ஜூலை 31ம் தேதி பார்மர் மாவட்ட போலீஸ் வெளியிட்ட ட்வீட் பதிவும் கிடைத்தது. இந்தியில் இருந்ததை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது, “தலித் ஒருவர் தாக்கப்பட்டார் என்று தவறான தகவலுடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குடும்ப பிரச்னை காரணமாக ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்தது. இது தொடர்பாக ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம், தலித் மீது சாதி ரீதியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் நபரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்தனரா!
Fact Check By: Chendur PandianResult: False
