FACT CHECK: சென்னை – சேலம் 8 வழிச்சாலை அமைக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

பிரதமரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்று சிலர் சமூக ஊடகங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த போது வலியுறுத்திய திட்டங்கள் பற்றிய அட்டவணையின் ஒரு பகுதியைப் பகிர்ந்துள்ளனர். அதில், “சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததை வட்டமிட்டு காட்டியுள்ளனர். நிலைத் தகவலில், “எட்டு வழிச் சாலை தேவையில்லை என்று போராட்டம் நடத்தியவர் அந்த சாலை முடிக்க வேண்டும் என்கிறார் ஏமாற்று ஏமாற்று என்பது தான் திமுக” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Sridharan Rangachari என்பவர் 2021 ஜூன் 18ம் தேதி இதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி இருந்த போது சென்னை – சேலத்துக்கு இடையே எட்டு வழி சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பொது மக்கள் எதிர்ப்பு காரணமாகவும் நீதிமன்றம் தடை விதித்ததாலும் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. அதைச் செயல்படுத்த அப்போது இருந்த அ.தி.மு.க அரசும் மத்திய நெடுஞ்சாலைத் துறையும் ஆர்வம் காட்டி வந்தன. இந்த திட்டத்துக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தது.

இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த தி.மு.க எட்டு வழிச் சாலையை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பகிரப்படும் பட்டியல் உண்மையானதுதான். அதில் சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதை செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்களா, செயல்படுத்தக் கூடாது என்று கூறுகிறார்களா என்று தெளிவாக குறிப்பிடப்படவில்லை. மேலும், இது பொருளடக்கம் / உள்ளடக்க பக்கம் மட்டுமே. பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த அறிக்கையின் 90வது பக்கத்தைப் பார்த்தால் மட்டுமே எட்டு வழிச் சாலை தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று தெரியவரும். ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு தி.மு.க அரசு எட்டு வழிச் சாலையை வலியுறுத்துகிறது என்ற முடிவுக்கு எப்படி வந்தார்கள் என்று தெரியவில்லை.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதற்கிடையே தமிழ்நாடு அரசு சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி தொடர்பாக விளக்கம் அளித்ததாக செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செய்தித் துறை வெளியிடும் அரசு செய்திக் குறிப்புகளை பார்வையிட்டோம். அதில், 2021 ஜூன் 17ம் தேதி தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த செய்தி வௌயீடு நமக்குக் கிடைத்தது. 

அசல் பதிவைக் காண: tn.gov.in I Archive

அதில், “மாண்புமிகு இந்தியப் பிரதமரிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (17.06.2021) வழங்கிய மனுவின் சுருக்க உள்ளடக்கக் குறிப்பில் 15 (e) குறிப்பிடப்பட்டுள்ள சென்னை – சேலம் பசுமை வழிச் சாலைத்திட்டத்தை கைவிடக்கோரி மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதன் மூலம் சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க தற்போது ஆட்சிக்கு வந்ததும் அதை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சென்னை – சேலம் 8 வழி சாலையை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சென்னை – சேலம் 8 வழிச்சாலை அமைக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “FACT CHECK: சென்னை – சேலம் 8 வழிச்சாலை அமைக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாரா?

  1. எட்டு வழி சாலை வேண்டாம் என்று மீடியாக்கள் தான் பேசுகின்றனர். சம்மந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் 80% பேர் வரவேற்கின்றர். எல்லோரும் அவர் அவரவர் ஊர்க்கு விவசாயிகள் கொடுத்த நிலத்தில்தானே ரோடு போட்டு செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு எந்த இழப்பீடும் கொடுக்கவில்லை அந்த காலத்தில். ஆகையால் நிலத்தை திருப்பி தர மீடியாக்கள் எழுதவேண்டி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

Comments are closed.